ஆக. 20ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையை திறக்க முதல்வர் உத்தரவு
மதுரை: ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் எதிரொலியாக பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டது. நீர் நிலைகளும் வழிந்தோடுகிறது.
இதுமட்டுமல்லாமல் கேரளத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பிவிட்டது. இதனால் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் தென் தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு அதிக தண்ணீர் வருகிறது.
இந்நிலையில் வைகை அணையை திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பெரியாறு பாசனப் பகுதி, திருமங்கலம் பிரதானக் கால்வாயின் ஒரு போக பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. நீர் இருப்பை பொறுத்து 1,130 கனஅடி வீதம் மொத்தம் 8, 461 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.
நீர் திறப்பின் மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 1,05,002 ஏக்கர் பாசன வசதி பெறும். எனவே வரும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.