கொடநாடு எஸ்டேட்டில் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு - முதல்வர் உத்தரவு
முதல்வர் உத்தரவினை அடுத்து கொடநாடு எஸ்டேட்டின் முக்கிய நுழைவாயில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
நீலகிரி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவினையடுத்து கொடநாடு எஸ்டேட்டின் முக்கிய நுழைவாயில்களில் 4 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவலாளி கொலை, பங்களாவில் கொள்ளை நடைபெற்றதை அடுத்து கொடநாடு எஸ்டேட்டில் இரவு நேரத்தில் ஆயுத படை போலீசாரும், பகல் நேரத்தில் உள்ளூர் போலீசார் 4 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொடநாடு பங்களா
கொடநாடு பங்களாவில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி காவலாளியை கொன்று ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம மரணம்
ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ்,சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கனகராஜின் நண்பர் சயனிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் பழனிச்சாமி
ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர், கொடநாடு விவகாரம் தொடர்பாக கேட்டறிந்தார்.

எஸ்டேட் பாதுகாப்பு
அப்போது பங்களாவில் போதிய பாதுகாப்பு இல்லாததே இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என்று கூறப்பட்டது. மேலும் அங்குள்ள எஸ்டேட்டில் நாள் ஒன்றுக்கு ரூ 1000 கிலோ வரை தேயிலை திருடப்படுவதாகவும்,அதிமுக பிரமுகர்களும், எஸ்டேட் நிர்வாகமும் தெரிவித்தது.

முதல்வர் உத்தரவு
இதையடுத்து கொடநாடு பங்களாவில் உள்ள முக்கிய நுழைவு வாயில்களில் இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு போட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இந்நிலையில் ஆயுதம் ஏந்திய போலீசார் மே 24ஆம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் வாகன சோதனை
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான காட்சி முனைப்பகுதிக்கு வருவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றன.

இரவு நேரத்திலும் பாதுகாப்பு
அங்குள்ள முக்கிய நுழைவு வாயில்களான 9,10,4 பகுதிகளில் இரவு நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வழக்கம் போல் உள்ளூர் போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் ஆயுத படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications