காவிரி நீர் பங்கில் கோட்டை விட்ட பழனிசாமி... ஓராண்டில் செய்த சாதனை இதுதானா?
காவிரி நீரில் தமிழகத்திற்கு இருந்த பங்கை குறைத்த பெருமையோடு தான் முதல்வர் பழனிசாமி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
Recommended Video
சென்னை : காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் கொண்டு வந்தது அதிமுகவின் சாதனை என்று தம்பட்டம் அடித்தது அதிமுக அரசு ஆனால் முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு செய்யும் நாளில் காவிரி நீர் பங்கில் கோட்டை விட்டுள்ளனர். காவிரி நீரை இழந்த பழியை சுமந்து கொண்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, வெளியான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 20, 2013ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
அரசாணையின் நகல் உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நதிநீர்ப் பங்கீடு, இனி காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலமே மேற்கொள்ளப்படும். இறுதித் தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அந்த அமைப்பே நீரை பங்கிட்டு வழங்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேலாண்மை வாரியமே எடுக்கும் என்பதால், தமிழகத்தைப் பொறுத்த வரை, காவிரி நதிநீரைப் பெறுவதற்காக இனி நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது என சுட்டிக்காட்டப்பட்டது.
தம்பட்டம் அடித்த அதிமுக
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழல் வெளியானதையே பெரிய சாதனையாக அதிமுக கொண்டாடியது. தனது 30 வருட அரசியல் வாழ்விலேயே மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் நாளென்றும், இதற்காகத்தான் 22 ஆண்டுகளாகத் தாம் போராடிவந்ததாகவும், தனக்கும், டெல்டா பகுதி விவசாயிகளுக்கும் இது மாபெரும் வெற்றியென்றும் ஜெயலலிதா பெருமைபட்டார்.
காவிரித் தாய் என பெருமை
அதற்கு பின்னர் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட காவிரித் தாயே என்றெல்லாம் ஜெயலலிதாவிற்கு கட்அவுட்கள் வைக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களிலும் இதனையே பிரதானப்படுத்தி பிரச்சாரங்கள் செய்யப்பட்டடன.
வாரியம் அமைக்கப்படவில்லை
ஆனால் அரசிதழில் வெளியிடப்பட்டு 5 ஆண்டுகள் ஆன போது காவிரி மேலாண்மை வாரியம் என்பது அமைக்கப்படவேயில்லை. மாறாக நீர் வழங்காத கர்நாடகாவை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கிற்கு மேல் வழக்காக போடப்பட்டு வந்தது. அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது கூட தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகாவுடன் தமிழக அதிகாரிகள் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.
பழைய பாட்டு தான் பாடினார்
பிப்ரவரி 16, 2017ல் ஆட்சிக்கு வந்த முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று பேசி வைத்த வசனத்தை மட்டுமே பேசினாரே தவிர புதிதாக எதையும் செய்யவில்லை. அதிலும் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னையான காவிரி நீர் விவகாரத்தில் கடிதம் எழுதிவிட்டு காத்திருந்தாரே தவிர மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் தரவேயில்லை.
அழுத்தம் தரவில்லை
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்த பின்னர் கூட காவிரி நீர் விவகாரத்தில் முழு அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. பாஜகவிற்கு நெருக்கமாக இருந்த காலகட்டத்திலேயே இந்த பிரச்னையை கையில் எடுத்து சரியான முறையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தை தர இருவருமே முயற்சிக்கவில்லை.
எத்தனை பிரதமரை பார்த்தார்கள்?
விவசாயத்திற்காக தற்போது காவிரி டெல்டா விவசாயிகள் காத்திருக்கும் நேரத்தில் தான் மீண்டும் கர்நாடகாவிற்கு கடிதம் எழுதி முதல்வரை சந்திக்க நேரம் கேட்டனர். அதற்கும் கர்நாடகா மசியவில்லை என்பது வேறு கதை. அதிமுக அணிகள் இணைப்புக்காக அடிக்கு ஒரு தரம் என டெல்லிக்கு பறந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் காவிரி நீருக்காக எத்தனை முறை பிரதமரையோ மற்ற அமைச்சர்களையோ சந்தித்துள்ளனர்.
ஓராண்டில் என்ன செய்தார்
ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டதாக முதல்வர் பழனிசாமி பூரிப்பில் இருக்கிறார். அவர் ஓராண்டில் தமிழகத்தில் செய்தது எல்லாமே ஏற்கனவே இருக்கும் விஷயங்களும், அதிமுக தேர்தல் அறிக்கையில் இருந்த விஷயங்களுமே தவிர மக்கள் நலனுக்கான எந்த சாதனையையும் ஓராண்டில் செய்துவிடவில்லை.
பங்கீட்டில் கோட்டை விட்டார்கள்
வழக்கையாவது சரியான முறையில் நடத்தினார்களா என்றால், அதுவும் இல்லை என்பது தான் இன்றைய தீர்ப்பின் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஏதோ பழமொழி சொல்வார்களே உள்ளது போனது என்பது போல 192 டிஎம்சி நீர் கூட தற்போது 177.25 டிஎம்சியாக குறைந்துள்ளது. கஷ்டப்பட்டு பெற்ற 192 டிஎம்சி காவிரி நீரில் 14 டிஎம்சியை கோட்டை விட்டுவிட்டோம் என்ற பெருமையோடு தான் இரண்டாவது ஆண்டில் முதல்வர் பழனிசாமி அடியெடுத்து வைத்துள்ளார்.