ஜெயலலிதாவின் இடையறாத முயற்சியால் தமிழக மீனவர்கள் 43 பேர் விடுதலை - தமிழக அரசு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் இடையறாத முயற்சிகளின் பயனாக, இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 77 பேரை விடுவிக்க இலங்கை அரசு ஆணையிட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் டைக்கப்பட்டுள்ள 77 மீனவர்களில் 43 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள மீதமுள்ளவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அவ்வப்போது கைது
நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும் போது இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர்.

தமிழக அரசின் நடவடிக்கை
இவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார்கள்.

77 தமிழக மீனவர்கள் கைது
நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் தங்களுடைய பாரம்பரிய பாக் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, கடந்த 31.5.2016 முதல் 15.7.2016 வரையான காலத்தில் 77 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

மத்திய அரசுக்கு கடிதம்
முதல்வர் ஜெயலலிதா தமது 31.5.2016, 4.6.2016, 6.6.2016, 9.6.2016, 16.6.2016, 25.6.2016, 3.7.2016, 5.7.2016, 7.7.2016 மற்றும் 16.7.2016 ஆகிய நாளிட்ட கடிதங்கள் மூலம் தமிழக மீனவர்கள் கைது பற்றிய விவரங்களை பிரதமரின் உடனடி நேரிடை கவனத்திற்கு கொண்டு சென்றார்கள்.

ராஜாங்க ரீதியில் நடவடிக்கை
அக்கடிதங்களில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 77 அப்பாவி தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நேரடியாக தலையிட வலியுறுத்தல்
பிரதமர், நேரடியாக தலையிட்டு அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதங்களில் வலியுறுத்தியுள்ளார்.

எஞ்சிய மீனவர்கள் விரைவில் விடுதலை
முதல்வர் ஜெயலலிதாவின் இடையறாத முயற்சிகளின் பயனாக, இலங்கைச் சிறையில் உள்ள நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சார்ந்த 77 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஆணையிட்டு, முதல்கட்டமாக 25.7.2016 அன்று 43 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். எஞ்சிய மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications