கோவை: மனுகொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி; மாணவிகள் மயக்கம்
கோவை: கோவையில் தனியார் கல்லூரியை அரசு ஏற்று நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனு நீதி முகாமில் மனு கொடுக்க வந்த மாணவ, மாணவிகள் 250 பேரை போலீசார் தாக்குதல் நடத்தி கைது செய்ததால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் சி.பி.எம். எனும் தனியார் கலைக்கல்லூரி உள்ளது. அரசு உதவி பெறும் இந்த கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும். அப்படி இதுவரை நிரப்பப்படாததால் தங்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மாணவர்கள், கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அமைச்சர்களையும் முற்றுகையிட்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இடைத்தேர்தலுக்கு பின்னர் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாணவிகள் முற்றுகை
இந்நிலையில், நேற்று 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணை கமிஷனர் பிரவேஸ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர், மாணவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முயற்சித்தனர்.
மயக்கமடைந்த மாணவிகள்
அப்போது அனைவரையும் உள்ளே செல்ல போலீசார் அனுமதியளிக்காததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாணவ, மாணவியர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் தாக்குதல் நடத்தியதில் பல மாணவிகள் மயக்கமடைந்தனர்.
மாணவிகள் கைது
ஆட்சியரை சந்தித்து முறையிடாமல் திரும்பப் போவதில்லை என மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், மாணவர்களை கைது செய்வதாக அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
மாணவிகள் ஆவேசம்
'நாங்கள் மனு கொடுக்கத்தான் வந்தோம். மக்கள் குறை தீர்வுக்கூட்டத்தில் மனு கொடுக்க அனுமதியில்லையா?. முன்னரே போலீசாருக்கு தகவல் சொல்லி விட்டுத்தான் வந்தோம். ஆனால் மனு கொடுக்க வந்த எங்களை தாக்கி, கைது செய்வது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. பல மாணவர்கள் மயங்கியுள்ளனர். இதற்கெல்லாம் போலீசார் பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என மாணவிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.
அலறிய மாணவிகள்
வர மறுத்த மாணவர்கள், மாணவிகள் மீது போலீஸின் அடக்குமுறையை கட்டவிழ்த்ததில் பல மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்குள்ளான மாணவிகள் எழுப்பிய அலறல் சத்தத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டது.