ரஷ்யப் புரட்சி 100.. மக்களை மீட்ட மார்க்சியம்..தேவை இருக்கும் வரை செத்துப் போகாது.. சுப.வீ நம்பிக்கை
மக்களை மீட்க செய்த புரட்சி அதன் தேவை இருக்கம் வரை செத்துப் போவதில்லை என்று சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை: 1917ம் ஆண்டு நவம்பர் 7 உலக வரலாற்றின் பொன் ஏடுகளால் பொறிக்கப்பட்ட ஒரு நாள். அதுவரை ரஷ்யாவில் ஜார் மன்னர்களின் காலடியின் பசியும், பட்னியுமாக செத்துக் கொண்டிருந்த மக்கள் ஒன்றிணைந்து லெனின் தலைமையில் புரட்சி செய்த நாள்.
ரஷ்யாவில் மக்கள் இருப்பதை மறந்து விட்டு ஆடம்பரம், அதிகாரம், உல்லாசம் என்று தான்தோன்றித்தனமாக நாட்டை ஆண்டு வந்தனர் ஜார் மன்னர் வம்சத்தினர். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். தின்னும் ரொட்டிக்குக் கூட நீண்ட வரிசையில் நின்று காத்துக் கிடந்தார்கள். அதுவும் பல நேரங்களில் கிடைக்காமலே போகும்.

மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டை காப்பாற்றும் ராணுவத்தினருக்கும் இதே பிரச்சனைதான். அவர்களுக்கும் ரொட்டியும் இல்லை. சம்பளம் இல்லை. நாட்டை காப்பாற்றும் ராணுவத்திற்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கேடு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில்தான், 1917ம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. இந்தப் புரட்சி குறித்து திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயளாலர் சுப.வீரபாண்டியன் ஒன்இந்தியாவிடம் பேசியது:
ரஷ்ய புரட்சி என்றும் சோவியத் புரட்சி என்றும் சொல்லப்படுபவை மொத்தம் 3 புரட்சிகள் எனக் கூற வேண்டும். முதல் புரட்சி 1905 ஆண்டு தொடங்கியது. ஆனால் அது மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. 2வது புரட்சி 1917ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மென்ஸ்விக்குகள் என சொல்லப்படும் ஒரு பிரிவினரால் நடத்தப்பட்டு ஆட்சியும் கைப்பற்றப்பட்டது. ஆனால் அது 6 மாதங்களில் முடிவுக்கு வந்தது.
இறுதியாக இன்று நாம் சோவியத் புரட்சி என்று சொல்லக் கூடிய 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் புரட்சியாளர் லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகளால் நடத்தப்பட்டதேயாகும். போல்ஷ்விக்குகள் என்பது பெரும்பான்மையினர் என்ற பொருள் குறிக்கும் சொல்.
ஜார் வம்சத்தைச் சேர்ந்த 2ம் நிக்கோலஸ் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுத் தொடங்கி இருந்தனர். ஆனால் அது முழுமை பெறுவதற்கு ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகின. முதல் உலகப் போர் தொடங்கும் வேளையில் 2ம் நிக்கோலஸ் அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டு ஒரு பெரிய பொருளாதார இழப்புக்கு காரணமாக இருந்தார்.
1914ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் உலகப் போர் தொடங்கியது. 1916ம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 18 லட்சம் ரஷ்ய வீரர்கள் இந்தப் போரில் இறந்து போய்விட்டார்கள். 20 லட்சம் வீரர்கள் எதிரிப் படையால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இதன் விளைவாக இராணுவத்திற்கு மன்னர் நிக்கோலசே தலைமை ஏற்று போருக்கு சென்றார். அது பெரிய வெற்றி எதனையும் ஈட்டித் தரவில்லை. மாறாக, தேசம் சமூக பொருளாதார குழப்பங்களுக்கு ஆளாவதற்கே வழி வகுத்தது. நிக்கோலஸின் மனைவி பெயருக்கே அரசியாக இருந்தார். சாமியார் ரஸ்புடினின் ஆட்சிதான் அப்போது நடைபெற்றது. ரஸ்புடினுக்கும் மிகக் கடுமையான எதிர்ப்பு ரஷ்யாவில் இருந்தது. அதன்விளைவாக 1917ம் ஆண்டு, ஜனவரியில் ரஸ்புடின் சாமியார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப்படி பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளான தேசம், லெனினின் புரட்சி போராட்டத்திற்கு பின்னர்தான் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தது. ஆட்சியை கைப்பற்றிய லெனின் முதல் உலகப் போரில் இருந்து ரஷ்யாவை உடனடியாக விடுவித்துக் கொண்டார். முதல் உலகப் போர் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போர்; நாங்கள் எங்கள் தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப் போகிறோம் என்றார் லெனின். அதற்கு பிறகு ரஷ்யா என்பது சோவியத் ஒன்றியம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அந்த ஒன்றியம் 75 ஆண்டுகள் நிலைத்து நின்றது.
1989 வரைக்கும் சோவியத் யூனியன் உலகத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது. தொடர்ந்து உலகின் பல நாடுகள் சோஷியலிஸ்ட் நாடுகளாக வலம் வந்தன. உலக வரைபடத்தில் ஒரு பாதிக்கும் மேல் சிவப்பாக மாறியது. உலக வரலாற்றில் நினைவு கூற வேண்டிய மிகப் பெரிய புரட்சிதான் நவம்பர் புரட்சி.
மாபெரும் வெற்றி பெற்ற சோவியத் புரட்சியும் கூட ஒரு கட்டத்தில் தன் தளர்வை எதிர் கொண்டது. 1924ல் லெனின் மறைந்தார். அதன் பிறகு அதனை கட்டி காத்த ஸ்டாலினும் 1953ல் மறைந்து போனார். பிறகு பதவி ஏற்ற அதிபர் குருசேவ் காலத்தில் இருந்து எதிர்க்கருத்துகள் உலக அளவில் எழத் தொடங்கியது. இறுதியாக, 1989ம் ஆண்டு சோவியத் அதிபராக இருந்த கார்பர்சேவ் கிளாஸ்நாஸ்ட் அதாவது திறந்த கருத்தாய்வு என்ற பெயரில் பல விவாதங்களுக்கு வழி வகுத்தார். அந்த விவாதங்களின் முடிவில் சோவியத் யூனியன் 14 துண்டுகளாக சிதறியது. இதனால், அடுத்தடுத்து பல கம்யூனிச நாடுகளும் அந்த பாதையில் இருந்து விலகின.
இந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்துக் கொண்டு கம்யூனிசம் மொத்தமாக தோற்றுப் போய்விட்டது என்று சிலர் கூறுகின்றனர். அது ஏற்புடையதல்ல. என்றைக்கும் சித்தாந்தங்கள் தோற்றுப் போவதில்லை. ஆட்சிகளும் ஆட்சியாளர்களும் மாறலாம். ஆனால் சித்தாத்தங்கள் அதன் தேவைகள் நிறைவடையும் வரை செத்துப் போவதில்லை.
மார்க்சியத்திற்கான தேவை வர்க்க முரண்பாடுகளை கொண்ட இன்றைய உலகத்தில் கண்டிப்பாக தேவையாக இருக்கிறது. மார்க்சியம் வெல்வதற்கு அரியது என்பதே உண்மை. எளிமையாக சொன்னால் அது ஒரு சமத்துவ கோட்பாடு. உலகத்தின் நியாயவாதிகள் சமத்துவவாதத்தை ஒருநாளும் புறக்கணிக்கமாட்டார்கள். புறக்கணிக்கவும் கூடாது. எனவே, இன்று ஏற்பட்டிருக்கும் தொய்வைக் கூட தற்காலிகமானது என்றே நாம் பார்க்க வேண்டும் என்று சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications