அமேஸானின் மோசடி.. கொந்தளித்த கோவை மக்கள்.. போலீஸில் புகார்
கோவை: அமேஸான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வரும் தினமும் ஒரு கிலோ தங்கம் திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதாகவும், தமிழக மக்களின் பணம் மோசடியாக சுரண்டப்படுவதாகவும் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
"பொருட்களை வாங்குங்க... தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்லுங்க" என நாளிதழ்களில் விளம்பரங்களை அள்ளி வழங்கி தற்போது அமேஸான் நிறுவனம் பெரும் மோசடிப் புகாரில் சிக்கியுள்ளது.
பத்திரிகை விளம்பரங்களில்தான் இப்படிப் போட்டுள்ளனர். ஆனால் அவர்களது இணையதளத்தில் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் "தமிழ்நாட்டில் வசிக்கிறவர்களுக்கு இந்தப் போட்டியில் இடம் கிடையாது" என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"ரூ.299-க்கு மேல் பொருட்களை வாங்குங்க. தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்லுங்க. தினமும் மாலை 6 மணிக்கு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்' என முழுப்பக்கத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ஆர்வத்தோடு பொருட்களை வாங்கி, போட்டியில் கலந்துகொண்டு தங்கத்தை அள்ள பலரும் கிளம்பினர். ஆனால், அங்கேதான் அமேஸான் ஆப்பு வைத்துள்ளது.
விதிமுறைகள் என்ற பெயரில், 'தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு இந்தப் போட்டியில் பங்கேற்கும் தகுதி கிடையாது' என குறிப்பிட்டுள்ளது அந்த நிறுவனம். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து விட்டு, தமிழக மக்களுக்கே அனுமதி இல்லை என்பது மிகப் பெரிய மோசடி என்று பலரும் கொதித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
கோவையில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், 'இது தமிழர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சி. அமேசானின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்து அவர் அளித்துள்ள புகாரில், ''தமிழ்நாட்டில் காலை, மாலை வரும் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் கடந்த இரு தினங்களாக அமேசான் எனும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்துள்ளது.
இந்தியாவின் ஈடு இணையற்ற விற்பனை என்று கொடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் 'அமேசான் ஆப்'பில் பொருட்களை வாங்குங்கள் தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற்றிடுங்கள்' என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் படிக்கும் பாமர மக்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை வாங்கினால் ஒரு கிலோ தங்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், அமேசான் நிறுவனத்தின் இணையதள முகவரியில் அதிகாரப்பூர்வமான விதிகள் என்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், தினமும் ஒரு கிலோ தங்கம் வெல்லும் தகுதி தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு இல்லை என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதி பத்திரிகைகளில் கொடுக்கப்படவில்லை. இது ஒரு நூதன மோசடி ஆகும். இதனால் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஏமாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால், உடனடியாக இந்த விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். மோசடியாக தமிழ்நாட்டில் மக்களை ஏமாற்றும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளாராம்.