அச்சச்சோ... கோவையில் கொ.ம.கவின் ‘தொப்பி’ சின்னத்திற்கு ஓட்டுக் கேட்ட ஜெ.!
கோவை: கோவையில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கேரள வாக்காளர்களுக்காக தொப்பி சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
ஆனால், தமிழகத்தில் தொப்பி சின்னத்தில் கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. இதனால் ஜெயலலிதா அந்தக் கட்சிக்கு ஓசியாக பப்ளிசிட்டி கிடைத்து விட்டது. அதுவும் ஜெயலலிதா வாயாலேயே.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆனால், கேரளாவில் 7 இடங்களில் போட்டியிடும் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடையாது. மாறாக தொப்பி சின்னம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...
இதனால், ஆங்காங்கே மொத்தம் மொத்தமாக வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஜெயலலிதா, கோவையில் கேரள வாக்காளர்களுக்கும் சேர்த்து வாக்கு சேகரித்தார்.
தொப்பிக்கும் சேர்த்து...
தமிழக வாக்காளர்களிடம் மறக்காமல் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்ட ஜெயலலிதா, அப்படியே கேரள வாக்காளர்களிடம் தொப்பி சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தார்.
கேரளாவில்...
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கேரள மாநிலத்திலும் தமிழகம் போன்ற திட்டங்களை நிறைவேற்றும் வகையில் 7 இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர். பணிகள் எல்லாம் அங்கு சிறப்பாகச் செயல்படுத்த அ.தி.மு.க சார்பில் அங்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தொப்பி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறசெய்ய வேண்டும்.
கண்டனம்...
கேரளத்தில் அ.தி.மு.க-வின் வெற்றியைத் தடுக்கும் நோக்கில் கழக வேட்பாளர்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குக் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். கட்சியினர் சுதந்திரமாகத் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றார்
ஈஸ்வரன் கட்சி...
ஆனால், இதில் காமெடி என்னவென்றால் தொப்பி சின்னமானது தமிழகத்தில் ஈஸ்வரன் தலைமையிலான கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு உரியதாகும். இந்தக் கட்சியானது கொங்கு மண்டலத்தில் 72 இடங்களில் நிற்கிறது.
கோவை மண்டலத்தில்...
இப்படி இருக்கையில் கோவையில் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு வாக்கு சேகரிப்பது போல ஜெயலலிதா தொப்பி சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.