தீவிரவாத ஒழிப்பு தின உறுதிமொழி: தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராகும் காங்கிரஸார்
சென்னை: தமிழக அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளான மே 21ம் தேதி தீவிரவாத ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 21ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அன்றைய முதல்வர் தலைமையில் அமைச்சர்களும், அரசு ஊழியர்களும் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொள்வது வழக்கம். இதுவரை அந்த நடைமுறையை கடைபிடித்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இந்த ஆண்டு அந்த நடைமுறையை அவர் கைவிட்டார்.
மேலும் இது ஒரு மரபு தான், சட்டம் அல்ல. பல மாநிலங்கள் இந்த இது போன்று செய்வதில்லை என தகவல் வெளியானது.
இந்த சம்பவம் காங்கிரஸார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு அரசியல் சார்பு நிலை எடுத்து செயல்படுவதாக காங்கிரஸார் குற்றம் சாட்டினர். மேலும், தமிழக அரசை ராஜீவ் காந்தி ஆன்மா கூட மன்னிக்காது என சாபம் விட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸார் இந்த சம்பவம் குறித்து அதன் டெல்லி தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தமிழக அரசுக்கு தங்களது கோபத்தை வெளிகாட்டும் வகையில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் உள்ள பிரச்சனைகளை மையமாக வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான அனுமதியையும் டெல்லி தலைமையிடம் பெற்றுவிட்டார்களாம்.
விரைவில் தமிழக அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள்.