டாஸ்மாக் கடைகள், பார்களில் சிசிடிவி கேமிரா பொருத்தக் கோரி மனு: அரசு பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சில்லறை மதுபான கடைகள், மதுபான பார்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமிரா பொருத்தக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கடந்தாண்டு நவம்பர் 9-ஆம் தேதி வரை, 6,181 சில்லறை டாஸ்மாக கடைகளும், 3,076 பார்களும் உள்ளன. மாநில காவல்துறை தலைவர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், பார்களில் வெளியே, உள்ளேயும் சட்ட விரோத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
பார்கள், டாஸ்மாக் அருகே வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும் அதிகளவில் மது அருந்துபவர்களின் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுகிறது. நிர்ணயித்த நேரத்தைத் தாண்டி மதுபானங்கள் விற்பனையும் நடைபெறுகிறது. பள்ளி செல்லும் இளம் வயதினரும் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று, மது அருந்துகின்றனர்.
ஆகையால், இளம் வயதினருக்கு மதுபானங்களை வழங்குவதைத் தடுக்கவும், அங்கு நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகள், தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை கண்டறியவும், மாநிலம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் கடைகள், பார்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும்.
அதே போன்று, இது குறித்து நவம்பர் 23-ல் வழங்கிய மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், டாஸ்மாக் கடைகளுடன் அனுமதியின்றி செயல்படும் பார்களை காவல்துறை தலைவர் மூடுவதற்கும் உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, நான்கு மாதத்துக்குள் மனுதாரரின் கோரிக்கையை பரீசிலித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.