சுற்றுலா தலங்களில் போலி ரசீது.. வாகன கட்டணக் கொள்ளை... தடுக்கக் கோரி எம்எல்ஏ பிரின்ஸ் மனு
கன்னியாகுமரி: அதிக அளவில் சுற்றுலா தலங்களைக் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி ரசீதுகளை அச்சடித்து, அதிக அளவில் வாகன கட்டணம் வசூல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக இடங்கள் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் சுற்றுலாவுக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் வருகின்றனர். இப்படி வாகனங்களில் வரும் பொதுமக்களிடமிருந்து அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு சில இடங்களில் தனியார் மூலமாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் அதிக அளவில் கட்டணமும், அரசு அனுமதி இல்லாமல் போலி ரசீதுகள் அச்சு அடித்தும் கட்டணத்தை அடாவடியாக வசூலித்து வருகின்றனர். போலி ரசீதுகள் அச்சு அடித்து, அதிக கட்டணம் வசூலிப்பதையும் தடுப்பதற்கு சம்மந்தபட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மற்றும் ஆன்மீக இடங்களில் வாகனம் நிறுத்துவதற்கு உள்ள பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கோரிக்கை வைக்கிறேன்.
கட்டாயமாக கணிப்பொறி மூலமாக மட்டுமே வாகன கட்டண ரசீது முறை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அமல்படுத்துவதால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுவிடும். சுற்றுலா இடங்களில் குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தகாரர் கணிப்பொறி வசதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் ஒப்பந்தகாரர்க்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கப்பட வேண்டும். ஒப்பந்த நிபந்தனைகளில் ஒரு சரத்து இவ்வாறு சேர்க்கப்பட வேண்டும். கணிப்பொறியில் கட்டண விபரங்களை சேர்த்தல், மாற்றம் செய்தல் போன்ற பணிகளை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில்தான் செய்ய வேண்டும்.
அனைத்து சுற்றுலா இடங்களில் அரசு நிர்ணயித்த வாகன கட்டண விபரத்தை பெரிய கொட்டை எழுத்தில் எழுதிய தகவல் பலகை அந்த பகுதியில் உள்ள போருராட்சி சார்பாக அமைக்கப்பட வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மற்றும் ஆன்மீக இடங்களில் தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் சீராக ஒரே மாதிரியாக அனைத்து இடங்களிலும் பொதுவாக கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தத்துக்கு என தனி தனியாக இடங்கள் அமைத்து அதற்கான போக்குவரத்து விதிகளை பின்பற்றி அலங்கார ஓடுகள் பதிக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் சுற்றுலா வாகனங்களுக்கு என வசூலிக்கப்படும் கட்டணம் ரவுடிகளை கொண்டு அடாவடியாக பெரிய கம்புகளை காட்டி மிரட்டி வசூலிக்கப்படுகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு மாற்று வழியை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தப்பட வேண்டும்.
கேரளா மற்றும் மற்ற மாநிலத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இங்கு வருவதால் இங்கு அமைக்கப்படும் கணிப்பொறி மூலமாக கொடுக்கப்படும் சீட்டில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அனைத்து விபரங்கள் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும் என்று பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications