நெல்லையில் மத பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு: தைவான் நாட்டை சேர்ந்த 11 பேரிடம் விசாரணை
நெல்லை: நெல்லை யில் மத பிரசாரம் செய்ததாக புகார் எழுந்ததையொட்டி தைவான் நாட்டைச் சேர்ந்த 11 பேரிடம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
தைவான் நாட்டைச் சேர்ந்த 8 பெண்கள் உள்பட 11 பேர் சுற்றுலா விசா பெற்று இந்தியா வந்துள்ளனர். இவர்கள் கடந்த 24ம் தேதி பாளையங்கோட்டை என்ஜிஓ பி காலனியில் உள்ள பிரபாகர் என்பவரது வீட்டில் தங்கினர்.

இந்நிலையில் தைவான் நாட்டை சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று பெருமாள்புரம் வாட்டர் டேங்க் அருகே சிலரிடம் துண்டு பிரசுரம் விநியோகித்து மத பிரசாரம் செய்ததாக தகவல் பரவியது. தகவல் அறிந்ததும் பாஜ மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் தலைமையிலான கட்சியினர் அங்கு தைவான் நாட்டினரிடம் மத பிரசாரம் குறித்து கேள்வி எழுப்பியதால் பிரச்னை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு பெருமாள்புரம் போலீசார் சென்று விசாரணை நடத்தியதோடு வெளிநாட்டினரை அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தைவான் நாட்டைச் சேர்ந்த 11 பேரும் நேற்று காலை நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். துணை கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
தைவானில் இருந்து நெல்லைக்கு அவர்கள் வந்ததன் நோக்கம் குறித்து விசாரித்தார். அவர்களது விசா கார்டுகளையும் வாங்கி பார்வையிட்டார். பாளையங்கோட்டையில் அவர்கள் தங்க அனுமதி கோரும் சி படிவம் நிரப்பி கொடுத்துள்ளார்களா என்பது குறித்தும் கேட்டறிந்தார். தைவான் நாட்டைச் சேர்ந்த யூஜி காகே, பான்யூஜின் ஆகியோர் தலைமையிலான குழுவினர் துணை கமிஷனரிடம் உரிய தகவல்களை அளித்தனர். மேலும் அவர்களை தங்க வைத்த என்ஜி ஓபி காலனியை பிரபாகரிடம் விசாரணை நடந்தது. இதனால் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல, நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள பத்மநேரியில் ஜெபகூடத்தை அகற்ற கோரி, ரேஷன்கார்டுகளை திருப்பி கொடுக்கும் போராட்டத்தை பிற மதத்தினர் நேற்று நடத்தினர். டிஎஸ்பி சண்முகம், தாசில்தார் கல்யாணகுமார் ஆகியோர் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications