பட்டுக்கோட்டையில் கருகிய பயிரை கண்ட விவசாயி அதிர்ச்சியில் மரணம் - மற்றொரு விவசாயி தற்கொலை
பருவமழை பொய்த்துப் போய் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது. பட்டுக்கோட்டை அருகே கருகிய பயிரைக் கண்ட விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர்: தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்த சோகத்தை தாங்க முடியாமல் தஞ்சை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடகா வழங்காததையடுத்து சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் சென்று சேரவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் அதிர்ச்சியில் உயிரிழப்பதும் மரணமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.

பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் விவசாயி நாராயணசாமி என்பவர் உயிரிழந்தார். தண்ணிரின்றி பயிர் கருகியதால் இதுவரை மனஉளைச்சலில் 11 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டை உக்கடை கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி,50 என்ற விவசாயி. இவர் அதே ஊரில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்து வந்தார்.
இந்நிலையில் பயிருக்கு காவிரி தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கருகியது. இதைப்பார்த்து மனமுடைந்த விவசாயி மாசிலாமணி ஞாயிறன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாசிலமணியை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சமீபத்தில் தமிழகத்தில் இதுவரை 14 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் வேதனையளிக்கிறது. காவிரியில் உரிய தண்ணீர் வழங்காத கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க எவ்வித அழுத்தமும் தராத மத்திய அரசும் தான் விவசாயிகள் தற்கொலை தொடர காரணம் என விவசாயிகள் சங்க நிர்வாகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications