கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சிதம்பரம்: மழை வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும் தருமபுரி எம்.பியுமான அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தம்பிக்குநல்லான்பட்டினம், கொட்டாபுளிசாவடி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை பார்வையிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மனிதநேயத்துடன் வழங்கி வரும் நிவாரண பொருட்களை போலீஸ் துணையுடன் அபகரித்து ஜெயலலிதா படத்தை ஒட்டுவது மிகவும் அவமானத்துக்குரியது. எனவே இது நிவாரணத்தை கொள்ளையடிக்கும் அரசாக உள்ளது. மாவட்டத்தில் நிவாரண பொருட்களை ஒருங்கிணைத்து கொடுக்கும் ஏற்பாடுகள் இல்லை. மாவட்ட ஆட்சியர் அதிமுக மாவட்டசெயலாளராக உள்ளார். தற்போது நிவாரணம் என்ற பெயரில் விளம்பர வேலைகள் நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சுனாமி, தானே புயல். வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் நடக்கிறது. இதனால் இம்மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தற்போது அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை. இந்த பேரிடர் நேரத்திலாவது டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். இல்லையேல் அரசு கொடுக்கும் நிவாரணம் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்றுவிடும். 15 நாளைக்காவது கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என அன்புமணி கூறினார்.