வர்தா புயல் கோரத்தாண்டவம்.. பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு
வர்தா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக தலைநகர் சென்னையை நேற்று மாலை கடந்த வர்தா புயலால் நகரமே சின்னாபின்னமாகிவிட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் இருந்தது.
காற்றும், மழையும் அம்மாவட்டங்களிலும் பலமாக இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு நிலவரப்படி புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக இருந்தது. தற்போது அது 18-ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 27 பெண்கள் உள்பட 172 பேர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புயல் கரையை கடந்தபோது அதிகபட்சமாக சென்னையில் காற்றின் வேகம் 192 கி.மீயாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உயிர் சேதம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கும் பொதுமக்கள் சோஷியல் மீடியாக்கள் வாயிலாக, நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.