கொட்டும் கனமழை... நிரம்பி வரும் தமிழக அணைகள்- விவசாயிகள் மகிழ்ச்சி
மேற்குத் தொடர்ச்சி மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தென்மேற்குப் பருவமழை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிறது. தமிழக கேரளா எல்லையிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையால் தமிழக அணைகள் நிரம்பி வருகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லையில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டம் திற்பரப்பு அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோவை, ஈரோடு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் எதிரொலியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 124 அடியிலிருந்து 126.10 அடியாக உயர்த்துள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 3,856 மில்லியன் கன அடியாகவும், 218 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 142 அடியை விரைவில் எட்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் மகிழ்ச்சியடைத்துள்ளனார்.

மேட்டூர் அணை
கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மிதமான மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.16 அடியிலிருந்து 77.39 அடியாக உயர்ந்துள்ளது.

வைகை அணை
இதேபோல் வைகை அணை நீர் மட்டமும் 36.81 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 61 கன அடியாகவும், நீர் கொள்ளளவு 717 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து 40 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு, சோத்துப்பறை அணைகள் நிரம்பிவழிகின்றன.

பாபநாசம் அணை
பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 143 அடி. நீர் இருப்பு, 83.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2804.72 கன அடி ஆகும். வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 304.75 கனஅடி.

மணிமுத்தாறு அணை
சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் 156 அடி. நீர் இருப்பு, 88.91 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1913.43 கன அடி ஆகும். மணிமுத்தாறு அணையின் உச்சநீர்மட்டம் 118 அடி. நீர் இருப்பு, 43 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 807 கன அடி ஆகும்.

பில்லூர் அணை நிரம்பியது
கடந்த 10 நாட்களாகத் தமிழகம், கேரளாவில் கனமழை பெய்ததையடுத்து பில்லூர் அணை நிரம்பியதால் நான்கு மதகுகள் வழியாகத் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுவாணி அணை
மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணை தற்போது 42 அடியை தாண்டி உள்ளது.

திருமூர்த்தி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக அருவிக்குச் செல்ல அறநிலையத் துறையினர் தடை விதித்துள்ளனர். 60 அடியாக உள்ள திருமூர்த்தி அணை நிரம்பி வருகிறது. இதேபோல 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் தற்போது 85 அடியாக உள்ளது. தொடர் மழை காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்ட அணைகள்
பேச்சிப்பாறை அணையின் மொத்த கொள்ளளவான 48 அடியில் தற்போது வரை 21 அடி நீர் வரத்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2086 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணியின் மொத்தக் கொள்ளளவான 77அடியில் தற்போது 45.10 அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1255 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கேஆர்பி அணை
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை முழு கொள்ளளவான 52 அடி நீர் இருப்பில் 51 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 355 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications