பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு - திருவிதாங்கூர் தேவசம் போர்டு
சபரி மலையில் பக்தர்கள் வசதிக்காக தரிசனம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
செங்கோட்டை: சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக தரிசன நேரம் தினமும் 5 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் 24-ம் தேதி நடைபபெறும் பாண்டியன் முடிப்பு திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக நேற்று கோட்டைவாசல் கருப்பாசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அதிகாலை, காலை, மதியம், மாலை, இரவு ஆகிய 5 நேரங்களுக்கு உணவு, உப்புமா, கஞ்சி, பயிறு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதிலுமிருந்து வரும் ஐய்யப்ப பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் தினமும் 5 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அரிவராசனம் பாடப்பாட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. கூடுதல் பக்தர்கள் வருகையினால் சாமி தரிசனத்திற்கு காலதாமதமானால் அவர்களிடம் நெய்த் தேங்காயை பெற்றுக்கொண்டு 11.30 மணிக்கு அபிஷேகம் செய்து பிரசாதம் வழங்கப்படும்.
கோடான கோடி ஐய்யப்ப பக்தர்கள் வந்து செல்லும் இங்கு முற்றிலும் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களை கேரளா மக்கள் ஆலய வளாகத்தினுள் அவமதிப்பதாக வரும் செய்திகள் தவறானவை. அப்படி ஏதும் நடந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.