கருணாநிதியை பார்க்க முதல் முறையாக தயாளு அம்மாள் வருகை.. குடும்பத்தினரும் மருத்துவமனையில் குவிந்தனர்!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, காவேரி மருத்துவமனைக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் முதன்முறையாக இன்று வருகை தந்தார்.
கருணாநிதி கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை
கடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தயாளு அம்மாள் வருகை
இந்த நிலையில் முதல் முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இன்று காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளால் தயாளு அம்மாள் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரும் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்தபடி இருக்கிறார். அதனால் தான் இத்தனை நாட்களாக அவர் காவேரி மருத்துவமனை வரவில்லை என்று கூறப்படுகிறது. துணைவியார் ராசாத்தி அம்மாள்தான், கருணாநிதியுடன் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.
சக்கர நாற்காலி
இந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு தயாளு அம்மாள் இன்று மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். கருணாநிதி பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளை ஏற்றும் வசதி கொண்ட வேனிலேயே, தயாளு அம்மாளும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
குடும்ப உறுப்பினர்கள் வருகை
இன்று காலை முதலே கருணாநிதியின் குடும்பத்தினர் காவிரி மருத்துவமனைக்கு அடுத்தடுத்து வந்து நலம் விசாரித்து சென்றபடி உள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரின் சகோதரர் அழகிரி, சகோதரியும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி, பேரப்பிள்ளைகள், தயாநிதி, உதயநிதி கட்சி நிர்வாகிகளான துரைமுருகன், டி.ஆர்.பாலு, வேலு, நேரு உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தனர். கனிமொழி காலை 7 மணிக்கே உடல் நலம் விசாரிக்க மருத்துவமனை சென்றார்.
அறிக்கை எதிர்பார்ப்பு
காவேரி மருத்துவமனையில் அடுத்தடுத்து கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் வந்து செல்வதால், அவரின் உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வாரமாக கருணாநிதியின் உடல் நலம் குறித்த தகவலை காவேரி மருத்துவமனை வெளியிடாததால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.