48வது பிறந்தநாள்... கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் தயாநிதிமாறன்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறன், கடந்த 1966ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தஞ்சாவூரில் பிறந்தவர். திமுக தலைவர் கருணாநிதி இவருக்கு தாத்தா முறை.
கடந்த 2004ம் ஆண்டு முதல் மே 2007 வரை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி பதவி வகித்தார். பின்னர், 2009 - 11 வரையிலான கால கட்டத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

ஏர்செல் மாக்சிஸ் முறைகேட்டில் இவருக்கு தொடர்பிருப்பதாக மத்திய புலனாய்வுச் செயலகம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு ஜூலை மாதம் தனது மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜினாமா செய்தார். 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், கடந்த லோக்சபா தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், தயாநிதிமாறன் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையொட்டி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கி.வீரமணியும் வாழ்த்து பெற்றார்...
இதேபோல், கடந்த 2ம் தேதி தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கும் அறிக்கை வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார் கி.வீரமணி.












Click it and Unblock the Notifications