குமுதம் ரிப்போர்ட்டர், இந்தியன் எக்ஸ்ப்ரஸ், மாலைமுரசு மீது தயாநிதி மாறன் வழக்கு!
இந்த அவதூறு வழக்கில் தயாநிதி மாறன் சார்பில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், மாலை முரசு மற்றும் குமுதம் ரிப்போர்ட் டர் ஆகிய பத்திரிகைகள் முன்னாள் மத்திய அமைச் சர் தயாநிதி மாறன் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன.
தன் மீது மத்திய புலனாய்வுத் துறையினரால் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ரூ.1 கோடியே 20 லட்சம் இழப்பு என்று குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க தவறானது, ஆதாரம் அற்றது என்பதை சட்ட ரீதியாக நிரூபிப்பேன் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள இந்த பத்திரிகைகள், தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும், எவராலும் தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும், வழக்கு விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாகவும் வேண்டுமென்றே இட்டுக்கட்டி, அவரது பெயருக்கும், அவரது குடும்பத்தினர் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு பொய்யான அவதூறு செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தன.
மேலும், அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரைகளில் வழக்கு பற்றி எதுவுமே எழுதாமல், சமூகத்திலும், நியாயமாக சிந்திப்பவர்கள் மத்தியிலும் தயாநிதி மாறன் மீதும், அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு சேற்றை வாரி வீசியிருக்கிறார்கள்.
மேற்கண்ட பத்திரிகைகள் ஏற்கனவே தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பற்றி அவதூறாக எழுதிய போது தொடரப்பட்ட இது போன்ற அவதூறு வழக்கில், தாங்கள் வெளியிட்ட தவறான செய்திக்கு வருத்தம் தெரிவித்து மறுப்பை வெளியிட்டார்கள்.
அதன் பிறகும் இது போன்ற விஷமப் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை சார்ந்த ஜுன்ஜுன்வாலா மற்றும் எடிட்டர் சுதர்சன், மாலை முரசு நாளிதழின் ஆசிரியர் செல்வம் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர் கோசல்ராம், வெளியீட்டாளர் பா.வரதராஜன் ஆகியோர் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கினை தொடர்ந்துள்ளார்.
சம்மன்
இந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட சைதாப்பேட்டை 23ம் பெருநகர குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை சார்ந்த ஜுன்ஜுன் வாலா மற்றும் எடிட்டர் சுதர்சன், மாலை முரசு நாளிதழின் ஆசிரியர் செல் வம் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர் கோசல்ராம், வெளியீட்டாளர் பா.வரதராஜன் ஆகியோர் வருகிற ஜூலை 15ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.