டிடியில் மீண்டும் ராமாயணம், மகாபாரதம் சீரியல்கள்... டிஆர்பியை அதிகரிக்க திட்டம்
தூர்தர்சனில் மீண்டும் ராமாயணம், மகாபாரதம் டைப் சீரியல்களை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: டிடி எனப்படும் தூர்தர்சனில் ராமாயணம், மகாபாரம் பார்த்த காலத்தை மறக்க முடியாது. 1987களில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாச தொடர்களும், சந்திரகாந்தா,விக்ரமாதித்தன், அனுமான் என புராண தொடர்களையும் ஒளிபரப்பி ரசிகர்களை ஈர்த்தது.
சேட்டிலைட் சேனல்களின் வருகையினால் டிடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது மீண்டும் தனது டிஆர்பிஐ அதிகரிக்க இதிகாச தொடர்களை ஒளிபரப்ப தயாராகி வருகிறது.
நடுத்தரவயதில் இருப்பவர்கள் தங்களின் பள்ளி காலத்தில் தூர்தர்சன் நிகழ்சிகளை பார்த்ததை மறந்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு போல அப்போது சீரியல்கள் எல்லாம் அதிகம் ஒளிபரப்புவது கிடையாது.
டிடி சேனல்கள்
ஞாயிறு காலைகளில்தான் டிவியே கதி என்று கிடந்த காலமெல்லாம் உண்டு. எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் நடித்த காமெடி நாடகங்கள், ஸ்பைடர் மேன், ஹீமேன் கார்ட்டூன் தொடர்கள், ராமாயணம், மகாபாரதம் பார்த்த காலம் ஒரு வசந்தகாலம்.
டிடி ரசிகர்கள்
ஞாயிறு மாலை திரைப்படம், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்க்காமல் கண்கள் தூங்காது. புதன்கிழமை சித்ரஹார் என டைம்டேபிள் போட்டு பார்த்த காலம் உண்டு, இப்போதோ எதையுமே பார்க்க நேரமும் இல்லை. விருப்பமும் இல்லாமல் போய் விட்டது.
தனியார் சேனல்கள்
நூற்றுக்கணக்கான சேட்டிலைட் சேனல்கள் வந்து விட்டன. ஆனால் எல்லா சேனலும் அழுகாட்சி சீரியல்களையும், பேய், பாம்பு சீரியல்களையும் மூட நம்பிக்கைத் தொடர்களையும் ஒளிபரப்பி ரசிகர்களையும், இல்லத்தரசிகளையும் கட்டிப்போட்டு விட்டன.
குறைந்து போன பார்வையாளர்கள்
தூர்தர்சன் சேனல்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. மண்டலவாரியாக சேனல்கள் ஒளிபரப்பத் தொடங்கியும் வாசகர்களின் பார்வை என்னவோ குறைவாகவே உள்ளது என்பது பிரசார்பாரதியின் மனக்குறை.
டிஆர்பி கிடைக்குமா?
தூர்தர்சன் சேனலை அதிக அளவில் பார்க்க வைக்க மீண்டும் இதிகாச தொடர்களை தயாரித்து ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. மீண்டும் ராமாயணம், மகாபாரதம் தொடர்களை தனியார் சேனல்களுக்கு போட்டியாக தயாரித்து ஒளிபரப்ப முடியுமா? அப்படியே ஒளிபரப்பினாலும் தனியார் சீரியல்களின் மோகத்தில் மூழ்கியிருக்கும் ரசிகர்களின் பார்வை தூர்தர்சன் பக்கம் திரும்புமா? பொருத்திருந்து பார்க்கலாம்.