அனைத்து பக்கமும் கட்டம் கட்டப்படும் தீபா.. அரசியல் எதிர்காலம் அவ்வளவுதானா?
அரசியலை விட்டு தீபாவை வெளியேற்ற தேவையான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஒருபக்கம் நடந்து வருகின்றன. தீபாவின் அடுத்தகட்டட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சென்னை: அதிமுகவில் தற்போது கண்கள் பனித்து, இதயம் இனிக்கும் படலம் இனிதே அரங்கேறிக்கொண்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மங்களை அவிழ்க்க சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும், சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்தே விலக்க வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வம் டீம் கோரிக்கை.
ஆனால், கோர்ட்டில் வழக்கிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடியாது, தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடப்பதால் சசிகலா குடும்பத்தை விலக்க முடியாது என்று எடப்பாடி டீம் பதிலடி கொடுத்துவிட்டது.
இரு அணிகளுக்கும் கட்டாயம்
ஆனாலும் வேறு வழியில்லை ஓ.பி.எஸ் அணிக்கு. எப்படியாவது எடப்பாடி பழனிச்சாமி அணியோடு சேர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. இரட்டை இலை சின்னம் சிக்கலில் மாட்டியுள்ளதால் பன்னீர்செல்வம் அணியை பக்குவமாக அணைத்து செல்ல வேண்டிய கட்டாயம், எடப்பாடி அணிக்கு உள்ளது.
பகைக்க முடியாது
இதுதவிர தொழில் விவகாரங்களில் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் நடுவே நல்லிணக்கம் உள்ளது. 25 வருடங்களாக இணைந்து செயல்பட்டவர்கள். எனவே ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ள முடியாது. புதிதாக உள்ளே வந்த பங்காளி டிடிவி தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் கட் செய்துவிட்டால் இருவருக்கும் போதும்.
சசிகலா புஷ்பாவுக்கு தூது
இந்த நிலையில்தான், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே மோதல் போக்கினால் அதிமுகவைவிட்டு வெளியேறிய, சசிகலா புஷ்பாவுக்கும் தூதுவிட்டுள்ளனர் எடப்பாடி குழுவினர். ஒரு அமைச்சரும், எம்எல்ஏவும் சசிகலா புஷ்பாவிடம் தூது போயுள்ளனராம். அவரையும் அரவணைத்துச் சென்றால்தான் டெல்லியில் அதிமுகவின் ஒற்றுமையை பறைசாற்ற முடியும் என எடப்பாடி பழனிச்சாமி டீம் நினைக்கிறது.
இரட்டை இலை சின்னம் மீட்பு
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் அளித்த பல ஆவணங்களும் முக்கிய காரணம். எனவே அவரையும் அரவணைத்து, இரட்டை இலை சின்னத்தை தக்க வைத்துக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி முயல்கிறது. இதுவரை சசிகலா புஷ்பா கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை.
பன்னீர்செல்வம் மரியாதை
ஆனால், இதில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பு தொடங்கிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நிலை பரிதாபம். பேரவை தொடங்கும் முன்பாக பன்னீர்செல்வத்திடம் நட்பு பாராட்டினார் தீபா. வீட்டு வாசலுக்கே வந்து தீபாவை அழைத்துச் சென்றார் பன்னீர்செல்வம். ஆனால் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. பன்னீர்செல்வத்தை தனது பிரசாரத்தின்போது சகட்டுமேனிக்கு, திட்டி தீர்த்தார் தீபா. சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி என யாருமே இவரது விளாசலுக்கு தப்பவில்லை.
தீபாவுக்கு கல்தா
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் கை கோர்த்ததோடு, சசிகலா புஷ்பாவையும் இணைக்க முயல்கிறது. ஆனால் தீபா தனியாக கழற்றிவிடப்பட்டுள்ளார். அவரால் இவ்விரு அணிக்கும் எந்த ஒரு சட்டச் சிக்கலோ, ஆதாயமோ கிடையாது என்பதால் தீபாவை கண்டுகொள்ளவில்லை, இரு அணிகளும்.
கணவரும் தனிக்கட்சி
தீபாவின் கணவர் மாதவனோ, எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற பெயரில் புதுக்கட்சி ஆரம்பித்துள்ளார். தீபா மீது மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில், பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலை விட்டு தீபாவை வெளியேற்ற தேவையான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஒருபக்கம் நடந்து வருகின்றன. தீபாவின் அடுத்தகட்டட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.