தீபா வேட்பு மனுத்தாக்கல் தள்ளி வைப்பு.. இரட்டை இலை சின்னம் முடிவுக்காக காத்திருப்பா?
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள தீபா வேட்புமனுத் தாக்கலை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள தீபா வேட்புமனுத் தாக்கலை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார். இரட்டை இலைச் சின்னம் தொடர்பான முடிவு இன்று வந்துவிடும் என்பதற்காக அவர் தனது வேட்புமனுத் தாக்கலை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா மீதுள்ள வெறுப்பின் காரணமாக அதிமுக தொண்டர்கள் ஜாடையில் ஜெயலலிதா போலவே இருக்கும் அவரது அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். தீபாதான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.
ஆர்கே.நகர் அதிமுக மகளிர் அணியினரும் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவரது அத்தையான ஜெயலலிதாவின் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இன்று அறிவித்திருந்த தீபா
இதையடுத்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கிய தீபா, ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இன்று ஆர்கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
நாளைக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் தனது வேட்பு மனுத்தாக்கலை தீபா திடீரென நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். ஏற்கனவே தீபாவின் கணவர் பேரவையில் இருந்து விலகுவதாக கூறியதோடு சசிகலாதான் தீபாவை இயக்குகிறார் என்றும் கூறினார். இதனால் பேரவைக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவரது பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு கேள்விகளுக்கு இடம்
இந்நிலையில் தீபாவின் வேப்புமனு தள்ளிவைப்பு முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். சமாதிக்கு செல்லும் தீபா வேட்பு மனுவை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கிவிட்டு தீபா ஆர்.கே.நகரில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
இன்று நல்ல நாள் இல்லை
இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபா அதனை நாளைக்கு தள்ளி வைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இன்று நல்ல நாள் இல்லை என்றும், அதனாலேயே தீபா நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இரட்டை இலைக்காக காத்திருப்பு
மேலும் இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பது இன்று தெரிந்து விடும். அதன் முடிவுக்காகவே தீபா காத்திருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஓ.பி.எஸ் அணியுடன் இணைந்து செயல்படுவதற்கு வசதியாகவே தீபா காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.