புதுக் கட்சி தொடங்கிய தீபா ஆதரவாளர்கள்.. கொடி, சின்னம் அறிமுகம்! சசிகலா தரப்புக்கு ஷாக்
ஜெயலலிதா அண்ணன் மகள், தீபா ஆதரவாளர்கள், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று துவங்கியுள்ளனர். சின்னமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகளான, தீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று துவங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை கட்சி அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என தெரிகிறது. அவரது படம் போட்ட பேனர்கள், போஸ்டர்கள் தாறுமாறாக கிழிக்கப்பட்டு வருவதே அதற்கு சான்று.
அதேநேரம், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, தி.நகரிலுள்ள அவரது வீட்டு முன்பாக அதிமுக தொண்டர்கள் அலை, அலையாக குவிந்து வருகிறார்கள்.
புதிய கட்சி, சின்னம்
இந்நிலையில், ஈரோட்டில் நேற்று, தீபா ஆதரவாளர்கள், புதிய கட்சி, கொடி மற்றும் அதற்கான சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்து சசிகலா தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சியின், எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலரும், 22வது வட்ட செயலருமான தமிழ் மாதேஸ் என்பவர் வீட்டில், கட்சியின் துவக்க விழா நடந்துள்ளது.
நிர்வாகிகள்
மீனவரணி மாவட்ட செயலர் பாரூக், கொடுமுடி முன்னாள் சேர்மன் தமிழ்செல்வி, 57வது வட்ட செயலர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனராம். கட்சிக்கு 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என, கட்சிக்கு பெயரிட்டுள்ளனர்.
இரட்டை ரோஜா
கறுப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளை பகுதியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றுள்ளன. இரட்டை ரோஜாவை சின்னமாக அறிவித்துள்ளனர்.
விறுவிறு
ஈரோடு மாவட்டம் முழுவதும் கிளைகளை உருவாக்கி, இரண்டு முதல், ஐந்து லட்சம்உறுப்பினர்களை சேர்க்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்' என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.