அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக்கழகம் உதயமானது - நாமக்கல்லில் தீபா ஆதரவாளர்கள் துவக்கம்
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு போட்டியாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர்கள் இணைந்து அம்மா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளனர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சசிகலா.
சசிகலாவை ஏற்றுக்கொள்ள முடியாத பலரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தீபாவிற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை நாமக்கல்லில் தீபா ஆதரவாளர்கள் தொடங்கி உள்ளனர். மோகனூர் அருகே உள்ள நெய்க்காரன்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் இதற்கான கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்ல.ராசாமணி தலைமை வகித்தார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செல்ல.ராசாமணி கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அதிமுக கட்சி கொடியின் வண்ணத்தில் இருந்த கொடியின் நடுவில் அண்ணாவுக்குப் பதில் ஜெயலலிதா இரு விரலைக் காண்பித்தபடி இருக்கும் படம் இடம் பெற்றிருந்தது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து வந்தவர்களுக்கு உறுப்பினர் படிவம் வழங்கி, உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அதிமுக முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
•அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தை ஜெ. தீபா தலைமையேற்று நடத்த வேண்டும். ஜெ.தீபாவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், மத்திய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
•ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் வேதா இல்லம் நினைவு இல்லமாகவும், அவரது பொருட்கள் காட்சிப் பொருளாகவும் வைக்க வேண்டும். வரும் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் நாமக்கல் மாவட்டத்திற்கு நகர, ஒன்றிய பேரூர் மற்றும் குக்கிராமங்களில் அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கிளை கழகம் அமைக்கப்படும்.
• எம்ஜிஆர் 100வது பிறந்த நாள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாப்படும்.
•ஜெயலலிதா பிறந்த தினம் தமிழர் உரிமைகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
•அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உதயமாகும் கட்சிகள்
திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் புதிய கட்சிகள் உருவாகியுள்ளன. ஏற்கனவே இனியன் சம்பத் அம்மா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
ஈரோட்டில் எம்ஜிஆர் ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாமக்கல்லில் அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.