ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் உள்நாட்டு உற்பத்தி மேலும் குறையும்: ப.சிதம்பரம் கருத்து
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் ஒரு சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் ஒரு சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2015-16-ஆம் நிதியாண்டில் 7.6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 7.1 சதவீதமாக குறையும் என்று தலைமை புள்ளியியல் டிசிஏ ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அதேசமயத்தில், வேளாண் துறை, மீன் பிடிப்புத் துறை, வனத் துறை ஆகியவற்றின் வளர்ச்சி 1.2 சதவீதத்தில் இருந்து 4.1 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சுரங்கத் துறையின் வளர்ச்சி 1.8 சதவீதம் குறையும் எனவும், உற்பத்தித் துறையின் வளர்ச்சி 9.3 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாகக் குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகள் மந்தமான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் 1 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 1 சதவீதம் என்பது ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி இழப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.