கருப்பு பணம், கள்ள சந்தை ஒழியாது... சாமானியர்களுக்கே துன்பம் அதிகம்: ப. சிதம்பரம் தாக்கு
ரூபாய் நோட்டுகள் மாற்றத்தால் கருப்பு பணம் ஒழிந்துவிடாது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டுகள் மாற்றத்தால் கருப்பு பணமோ, கள்ள சந்தையோ ஒழிந்துவிடாது; சாமானியர்களுக்கே துன்பம் அதிகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ப. சிதம்பரம் கூறியதாவது:
நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ளச்சந்தையையும் ஒழிக்கப்போவதாக கூறி ரூ.500, 1000 நோட்டுகளின் செயல்பாட்டை திடீர் என மத்திய பாரதிய ஜனதா அரசு முடக்கி உள்ளது. ரூ.500, 1000, நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவிக்கவில்லை.

ரூ2,000
புதிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றுதான் அறிவித்துள்ளார். புதிதாக ரூ.2000 நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

86% புழக்கம்...
2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திவிட்டு கருப்பு பணத்தையும், கள்ளச்சந்தையையும் ஒழிக்கப்போகிறேன் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. நாட்டு மக்கள் பயன்படுத்தும் பணத்தில் 86% ரூ. 500, 1000ம் நோட்டுகள் தான். மீதி 14% தான் 100 ரூபாய்களும் அதற்கு குறைந்த ரூபாய்களும்.

நியாயமே இல்லை..
நாட்டில் உள்ள 400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கு ரூ. 17 லட்சம் கோடி ரூபாயையும் முடக்குவது எந்த விதத்தில் நியாயம்? இந்த புதிய திட்டத்தில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை.

துயரம்தான் அதிகம்
2012ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சி நடந்த போது இதேபோல் ஒரு திட்டத்தை செயல்படுத்தப்படுவது பற்றி ஆலோசித்தோம். தற்போது மோடி அறிவித்துள்ள இந்த புதிய திட்டத்தால் கருப்பு பணமும் ஒழியப் போவதில்லை, கள்ளச்சந்தையும் ஒழியப் போவதில்லை. சாமானிய மக்களுக்குதான் அதிக துன்பத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications