மரண பீதியை கிளப்பும் டெங்கு.. இன்று இதுவரை மட்டும் 7 பேர் பலி
தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் விஸ்வரூபமெடுத்துள்ளது. அதி தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் 10க்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர். இதனால் சாதாரண காய்ச்சல் என்றால் கூட மக்கள் மரண பீதியுடன் மருத்துவமனையை அணுகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மட்டும் இதுவரை 7 பேர் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த கவிதா என்ற இளம் வழக்கறிஞர் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனயில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் சென்னையை அடுத்த திருமழிசையில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் ரித்திஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் நாற்றாம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத ஆண் குழந்தை பிரதீ, கிருஷ்ணகிரி மாவட்டம் கொரலநத்தத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி சஹானா மற்றும் மதுரை மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி நூர்ஜஹான் ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற 27 வயது இளைஞர் காய்ச்சல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி திருநாவுக்கரசு இன்று உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications