அதிவேகமாக பரவும் டெங்கு... தமிழகத்தில் நேற்று 8 பேர் பலி
டெங்கு காய்ச்சலுக்கு நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. டெங்குவிற்கு நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழை தீவிரத்தால் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது. மதுரை மாவட்டத்தில் நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
கோவை மாவட்டத்திலும், அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. கொசுக்களும் உற்பத்தியாகி வருகின்றன. டெங்குக் காய்ச்சல் பாதிப்பால் மதுரை மாவட்டம், பேரையூர் அருகே ஜோதிநாயக்கனூரைச் சேர்ந்த சோங்குவீரணன் மனைவி ராணியம்மாள்,50, அலங்காநல்லூரைச் சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவி வர்ஷினி,18, வில்லாபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி,51 உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், வடகரையைச் சேர்ந்த ஜாபர்அலி,52, சோழவந்தான் அடுத்த பொம்மன்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் மனைவி வேளாங்கண்ணி,38, கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த மூக்கனூரைச் சேர்ந்த நெசவு தொழிலாளி குணசேகரன் மகன் சுதர்சன்,14, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழப்பத்தையைச் சேர்ந்த பழனிசாமி மனைவி அம்மா பொன்னு,46, திருச்சி அடுத்துள்ள குழுமணி அருகே சீராத்தோப்பைச் சேர்ந்த பாண்டியன் மகன் குபேந்திரன்,21 ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.