மெரீனாவில் பறந்த "டெங்கு கொசு".. தத்ரூப மணற் சிற்பமாக உருவாக்கிய ஒடிஷாவின் சுதர்சன்!
சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி சமாளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
டெங்கு நோயை கட்டுப்படுத்தவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோத்ரெஜ் நிறுவனத்துடன் இணைந்து, உலகின் புகழ் பெற்ற மணல் சிற்பகலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்த மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
இந்தியா முழுவதும் முப்பது நகரங்களில் பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது போன்ற மணல் சிற்பங்கள் உருவாக்கப்படும் என்று சுதர்சன் பட்நாயக் தெரிவித்தார்.
இந்த மணல் சிற்பத்தை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். பொதுமக்கள் சிலர் தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
சுதர்சன் பட்நாயக் தனது மூன்று மாணவர்களுடன் இணைந்து 5 மணிநேரம் இந்த சிற்பத்தை உருவாக்கினார். எத்தனையோ நாடுகளின் கடற்கரையில் மணற்சிற்பங்களை உருவாக்கியிருந்தாலும் சென்னை மெரீனா கடற்கரை புது அனுபவமாக இருந்ததாக பட்டநாயக் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களில் மட்டும் 3000 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே டெங்கு குறித்து விழிப்பணர்வை ஏற்படுத்தவே இந்த மணற் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோத்ரேஜ் நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.
ஒடிஷாவின் பூரியில் தொடங்கி, சென்னை, மும்பை ஜூகு பீச் என பயணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் 6 ஆண்டுகளில் 60 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் பதிவில் உள்ள புள்ளி விவரங்களைவிட பல மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆண்டு தோறும் டெங்கு காய்ச்சலுக்கு ரூ.6,753 கோடி செலவிடப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது
இந்தியாவில் 99.7 சதவீதம் டெங்கு நோயாளிகளின் விவரங்கள் அரசின் பதிவுகளுக்கு வருவதில்லை. 0.3 சதவீதம் டெங்கு நோயாளிகளின் விவரங்கள் மட்டுமே அரசின் பதிவுகளில் பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.