பிற்பகலுக்கு மேல் பலத்த காற்று .. கடலுக்குள் செல்லாதீர்கள் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: புயல் அபாய எச்சரிக்கை உள்ளதால் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மாவட்ட ஆட்சியாளர் சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இன்று பகலுக்கு மேல் பலத்த காற்று வீச ஆரம்பிக்கு்ம் என வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் தீவுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழை நீர் வெள்ளமென குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தமிழக கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியாளர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக கடலோர பகுதியின் வடகிழக்கு திசையில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
சென்னையில் உள்ள மீனவ கிராமங்களில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய்தறை அலுவலர்கள் மூலம் மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.