சசி தரப்பு அதிமுகவில் மூண்டது மோதல்.. தினகரன் முன்னிலையில் காரசார வாக்குவாதம்!
கோவை மாவட்ட அதிமுகவினர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அம்மாவட்ட சசிகலா தரப்பு அதிமுகவினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கோவை மாவட்ட அதிமுகவினர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அம்மாவட்ட சசிகலா தரப்பு அதிமுகவினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் முன்னிலையிலேயே அமைச்சர் எஸ்பி.வேலுமணியும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் மாறி மாறி குற்றம்சாட்டி வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.
அதிகாரப் போட்டியால் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. இதில் எம்எல்ஏக்கள் மற்றும் சில மாவட்ட செயலாளர்களை தவிர பலர் ஓபிஎஸ் அணிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மத்தை கையிலெடுத்துள்ள ஓபிஎஸ் அணி இதனை தங்களின் பலத்தை நிரூப்பிக்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டது. ஜெயலலிதா மரணத்துக்கு நீதிவிசாரணைக்கோரி கடந்த 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஓபிஎஸ் அணி உண்ணாவிரதம் மேற்கொண்டது.
பீதியடைந்த சசிகலா தரப்பு
இதில் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக திரண்ட அதிமுகவினர் கூட்டத்தால் சசிகலா தரப்பு பீதியடைந்தது.
தினகரன் தலைமையில் கூட்டம்
இந்நிலையில் அதிமுக முன்னணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில், அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மாநில தேர்தல் பிரிவு செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
கட்சிக்கு உண்மையிலேயே பாதிப்புதான்
அப்போது பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நமது கட்சி இரண்டாக உடைந்து கிடக்கிறது. இதனால் ஓ.பி.எஸ். தலைமையில் ஒரு பிரிவினர் தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். இது, நம் கட்சிக்கு உண்மையிலேயே பாதிப்புதான் என்றார். மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 30 ஆயிரம் தொண்டர்கள் வரை நம்மை விட்டு பிரிந்து ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிட்டனர்.
அமைச்சரை பிராண்டிய து.சபா
சமீபத்தில் ஓ.பி.எஸ் அணியினர் தமிழகம் முழுவதும் நடத்திய உண்ணாவிரத போராட்டத்திலும் கோவை சிவானந்தா காலனி பகுதியில் அதிமுக தொண்டர்கள் அதிகம்பேர் கலந்துகொண்டனர். கோவை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 3 எம்எல்ஏக்கள் ஓ.பி.எஸ் அணி பக்கம் சென்றுவிட்டனர் என்றார். மேலும் மாவட்ட செயலாளர், உள்ளூர் அமைச்சர் எனக்கூறிகொள்ளும் எஸ்.பி.வேலுமணி என்ன செய்கிறார் என தெரியவில்லை என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் சாடினார்.
இல்லாதது, பொல்லாதது சொல்ல வேண்டாம்
இதனால் பொங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த 5 ஆண்டு காலமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் செய்தவர். தற்போது 6 மாதமாகத்தான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றிபெற்று இங்குள்ள நிலவரத்தை காண்கிறார். அதனால், அவருக்கு இம்மாவட்டத்தை பற்றி முழுமையாக தெரியாது என்றார். மேலும் இல்லாதது, பொல்லாதது என எதையும் இங்கு சொல்ல வேண்டாம் என்று கூறிய அமைச்சர் எஸ்பி.வேலுமணி கோவை மாவட்டம் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. என்னை மீறி யாரும் கட்சியை விட்டு செல்லவில்லை என்றார்.
வேலுமணியை மறித்தனர்
ஆனால் அமைச்சரை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற எண்ணினாரோ என்னவோ பொள்ளாச்சி ஜெயராமன் அவரை மீண்டும் வாங்கினார். என்னைவிட வயதிலும், அனுபவத்திலும் வேலுமணி சிறியவர். நான், எம்ஜிஆர் காலத்து ஆள். இங்குள்ள பெரியவர்கள் எல்லோருக்கும் இதுபற்றி தெரியும். ஆனால், வேலுமணி சிறியவர். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஓ.பி.எஸ் அணி பிரிவுக்கு பிறகு முதல்முறையாக வேலுமணியை அவரது தொகுதிக்குள்ளேயே நமது கட்சியினர் இடைமறித்து, முற்றுகையிட்டு எதிர்கோஷம் எழுப்பியுள்ளனர். அவர், அமைச்சர் பதவியில் இருந்த இதுநாள்வரை இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது இல்லை. அவரது தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தே 15 ஆயிரம்பேர் கட்சியை விட்டு சென்றுவிட்டனர். எனவே, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நமது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.
அமைச்சர் மீது என்ன கோபமோ?
இதனால் அதிர்ச்சியடைந்த வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டை மறுத்தார். இருவரும் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் கடுமையாக காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 10 நிமிடம் வாக்குவாதம் நீடித்தது. உடனே, டி.டி.வி. தினகரன் தலையிட்டு, எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்தார். பொள்ளாச்சி ஜெயராமனின் குற்றச்சாட்டுகளும் புகாரும், எஸ்பி.வேலுமணி அமைச்சர் பதவிக்கும் மாவட்ட செயலாளர் பதவிக்கும் தகுதியானர் இல்லை என்பதை போலவே இருந்தது.