தீபங்கள் ஏற்றும்... தேவகோட்டையில் ஒளி ஏற்றி பிரியாவிடை பெற்ற மாணவர்கள்!
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பிரியாவிடை பெற்றுச் செல்லும் ஒளி விழா என்ற பெயரில் கோலாகலாமாக நடந்தது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்த இந்த ஒளி விழா கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
ஒளி ஏற்றுதல் விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர். அவர்கள் முன்பாக ஏழாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவர் ரஞ்சித் ஆங்கிலத்தில் வரவேற்புரையாற்றி அனைவரையும் வரவேற்றார். ஏழாம் வகுப்பு மாணவி தனம், அபிராமி அந்தாதி பாடினார். எட்டாம் வகுப்பு மாணவி சோலையம்மாள் சர்வ சமய வாழ்த்துக்கள் பாடலை பாடினார்.
மாணவியர் கல்விக்கடவுள் சரஸ்வதியை வணங்கி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற, அதனை எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர். பின்னர் எட்டாம் வகுப்பு மாணவி சொர்ணாம்பிகா உறுதி மொழி வாசிக்க, எட்டாம் வகுப்பு அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அதன் பிறகு தீப ஒளியை ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க அவர்கள் தீபத்தை வாங்கிக் கொண்டனர். ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில் மாணவர் கண்ணதாசன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சிகளை ஆறாம் வகுப்பு மாணவி தனலெட்சுமி தொகுத்து வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்திருந்தார். மாணவர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவியரின் நாடகம், திருக்குறள் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.