ஃபெரா வழக்கில் தினகரன் ஆஜராகவில்லை.. 24ம் தேதி ஆஜராகாவிட்டால் கடும் நடவடிக்கை.. நீதிபதி எச்சரிக்கை
ஃபெரா வழக்கில் தினகரன் இன்று ஆஜராகவில்லை. வரும் 24ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜராகவில்லை. கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதால் அனுமதி கோரி தினகரன் மனுத்தாக்கல் நீதிமன்றத்தில் செய்துள்ளார்.
டிப்பர் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலர்களையும், லண்டன் ஹோட்டல் மூலம் 36.36 லட்சம் டாலர்களையும், 1 லட்சம் பவுண்டுகளையும் டெபாசிட் செய்ததாக டிடிவி தினகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், எந்த ஆவணமும் இல்லாமல் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் தினகரன் மீது அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி கண்டனம்
இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி இந்த வழக்கானது நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் டிடிவி தினகரன் ஆஜராகாததால் கண்டனம் தெரிவித்த நீதிபதி ஏப்ரல் 13-ந் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
எச்சரிக்கை
ஆனால் அன்றும் தினகரன் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, நேற்று ஆஜராகாவிட்டால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்திருந்தார். இதையடுத்து டிடிவி தினகரன் நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
வீட்டில் பூஜை
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றும் தினகரன ஆஜராக வேண்டும் என்ற நிலையில், அவர் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை. தனது வீட்டில் பூஜை இருப்பதாகவும் கோயிலுக்கு செல்ல இருப்பதால் இன்று ஒரு நாள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பு வக்கீல் கூறியிருந்தார்.
மீண்டும் நீதிபதி எச்சரிக்கை
இதனால் நீதிபதி கடும் கோபம் அடைந்தார். வரும் 24ம் தேதி டிடிவி தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அன்று ஆஜராகவில்லை என்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.