அதெப்படி சரக்கு வேன் ஓட்டும்போது ஹெல்மெட் போடாம இருக்கலாம்? பைன் போட்ட திண்டுக்கல் போலீஸ்
திண்டுக்கல்: சரக்கு வேன் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை என கூறி அபராதம் விதித்து அசத்தியுள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீசார்.
கரூரை சேர்ந்தவர் முத்துச்செல்வம் சரக்கு வேனில் திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எரியோடு போலீசார் வேனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
பின்னர் முத்துச்செல்வத்திடம் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்துவிட்டு அபராதம் விதித்தனர். அவருக்கு அபராதம் விதித்த ரசீதில், 4 சக்கர வாகனத்தில் சென்ற முத்துச்செல்வன் 'ஹெல்மெட்' அணியவில்லை என பதிவு செய்திருந்தனர் எரியோடு போலீசார்.
இது தொடர்பாக எரியோடு போலீசாரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது எந்த ஒரு விளக்கத்தையும் தராமல் மழுப்பிவிட்டனர். இந்த ரசீது தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.