சட்டசபையை உடனே கூட்டுங்கள்.. ஆளுநரிடம் அதிரடி கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
Recommended Video
சென்னை: அதிமுக அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது சட்டசபையை உடனே கூட்ட வலியுறுத்தி கடிதம் ஒன்றை அவர்கள் அளித்தனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வரானார். இதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜெ. சமாதியில்..
ஜெயலலிதா சமாதியில் 30 நிமிடம் 18 எம்.எல்.ஏக்களும் தியானம் இருந்தனர். பின்னர் முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியை எப்படி சேர்க்கலாம்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
விளாத்திகுளம் உமாமகேஸ்வரி
இதனைத் தொடர்ந்து இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுடன் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமாமகேஸ்வரியும் வந்திருந்தார்.
ஆளுநருடன் சந்திப்பு
இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 19 ஆனது. இவர்கள் அனைவரும் ஆளுநரை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தனர்.
கடிதத்தில் என்ன?
அதில், எம்.எல்.ஏக்கள் ஆதரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இழந்துவிட்டது. ஆகையால் சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை பற்றி பரிசீலிப்பதாக ஆளுநர் தங்களிடம் தெரிவித்தார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.