மறுபடியும் அரசியல் களத்தில் குதிக்கிறாரா பாக்யராஜ்?... ஒரு மாதத்தில் தெரியும் என சூசகம்!
தான் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு மாதத்தில் அதற்கான முடிவு தெரியும் என்றும் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை : தான் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்து ஒரு மாதத்திற்கு முடிவு தெரியும் என்றும் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் கூறியுள்ளார். ரஜினி, கமல் அரசியல் பிரவேசம், உள்ளாட்சித் தேர்தல் குறித்து கருத்து கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர்கள் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பாக்யராஜ் கூறியதாவது :
தேர்தல் மன்னன் என்றெல்லாம் சிலர் பெயர் எடுத்துள்ளனர். அப்படியெல்லாம் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை இருப்பதாக சொல்லும்போது, கமலோ, ரஜினியோ அரசியலுக்கு வருவது அவர்களின் உரிமை. அவர்கள் அரசியலுக்கு வருவதை யாராலும் கூடாது என்று சொல்ல முடியாது, அது அவர்களின் உரிமை.
தொடர்ந்து அவர்கள் அரசியல் களத்தில் இருப்பார்களா இல்லையா என்பதை மக்கள், ஊடகங்கள் தீர்மானிக்கும். அதை தேர்தல் சமயத்தில் அவர்கள் செய்வார்கள். எனவே இத்தகைய நிலையில் இது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது தான் அரசியலுக்குள் வந்துள்ளார்கள், நான் இன்னும் இந்த அரசியலில் கால் எடுத்து வைக்கவில்லை. நானும் அரசியல் ரீதியாக கால் எடுத்து வைத்துவிட்டால் அப்போது பதில் சொல்வேன்.

மக்களுக்காக செயலாற்ற வேண்டும்
அரசியலுக்கு வந்த பின்னர் இது பற்றி கருத்து சொல்லித் தான் ஆக வேண்டும். அப்போது நான் தப்பித்து ஓட மாட்டேன், சாக்கு சொல்ல மாட்டேன். என் மனதில் என்ன தோன்றகிறதோ அதை வெளிப்படையாகச் சொல்வேன். தற்போதைய நிலையில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், வந்தால் அவர்கள் மக்களுக்காக செயலாற்ற வேண்டும் என்பதே முக்கியமானதாக இருக்கும். இத்தனை நாட்களாக அவர்கள் என்ன செய்தார்கள் என்றெல்லாம் மக்கள் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

எம்ஜிஆர் மக்கள் தலைவர்
எம்ஜிஆர் மக்கள் மனதில் இடம்பிடித்ததற்கு முக்கியக் காரணம் இது. தனக்கு எது கொடுத்தாலும் அது மற்ற தொழிலாளர்களுக்கும் கிடைத்திருக்கிறதா எனக் கேட்கும் பழக்கம் கொண்டவர் எம்ஜிஆர். எனவே அரசியலுக்கு யார் வந்தாலும் உடனே எதிர்ப்பை மக்கள் வெளிக்காட்டிவிட மாட்டார்கள். ஆனால், இதற்கு முன்பு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிப்பார்கள்.

ஒரு மாதத்தில் அரசியலுக்கு வரலாம்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எப்படி எதிர்பாராமல் கலந்துகொள்ள நேரிட்டதோ, அதே போன்று நான் அரசியலுக்கு வருவேனா என்பதற்கு எதிர்பாராமல் பல விஷயங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. வாய்ப்புகள் வரும்போது அதை பற்றி சொல்கிறேன், ரொம்ப தள்ளியெல்லாம் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு வராது, ஒரு மாதத்திற்குள்ளாகவே வந்துவிடும். ஒரு மாதத்திற்குள் நான் அரசியலுக்கு வருவது பற்றி எல்லாம் தெரிந்துவிடும், அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தல் உள்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கிறேன்.

அதிமுக ஒன்றுபட வேண்டும்
அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். தினகரனும் அதிமுகவும் ஒன்றுசேர்வார்களா என்பதற்கு காலம் எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போடலாம். பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எதிர் எதிர் அணியாக இருந்தாலும் பின்னர் ஒன்று சேர்ந்து விட்டனர். இதே போன்று எதிரிக்கு நண்பன் என்கிற ரீதியில் தினகரனும் அதிமுகவும் கூட ஒன்று சேரலாம், கட்சியின் அடிப்படை தொண்டன் என்கிற ரீதியில் அதிமுக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.
எம்ஜிஆரின் கலை உலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர் பாக்யராஜ். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியை ஆதரித்தார். அதன் பின்னர் தனிக்கட்சி தொடங்கிப் பார்த்தார். அதுவும் கரைசேராத நிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த ஓராண்டாக அதிமுக தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வருகிறார் பாக்யராஜ்,












Click it and Unblock the Notifications