பாபநாசம் படத்துக்கு தடை... விநியோகஸ்தர்கள் அதிரடி முடிவு!
கமல் படம் என்றாலே சுகப் பிரசவம் கிடையாது.. சிசேரியன்தான் என்பது எழுதப்படாத சமாச்சாரமாகிவிட்டது.
விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்கள் ரிலீசானபோது நடந்ததெல்லாம் நினைவிருக்கலாம். விஸ்வரூபத்துக்கு தியேட்டர் மற்றும் மதப் பிரச்சினைகளுடன் மல்லுக் கட்டினார் கமல்.

உத்தம வில்லன் சமத்தில் பைனான்ஸ் பிரச்சினை வர, லிங்குசாமி அதிலிருந்து மீள படாத பாடுபட்டு படத்தை வெளியிட்டார். படம் அவுட். ஏகப்பட்ட நஷ்டம் வேறு.
இப்போது பாபநாசம். இதுவும் பைனான்ஸ் பிரச்சினைதான்.
உத்தம வில்லன் ரிலீஸ் சமயத்தில், அந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க ரூ 30 கோடியில் லிங்குசாமிக்கே மீண்டும் ஒரு படம் பண்ணித் தருவதாக எழுத்துப்பூர்வ வாக்களித்திருந்தார் கமல். ஆனால் அதை உடனே தொடங்காமல், தனது தூங்கா வனம் படத்தைத் தொடங்கிவிட்டார்.
இப்போது விநியோகஸ்தர்கள் கேட்பது, அந்த நஷ்ட ஈட்டுப் படத்தை உடனே தொடங்காதது ஏன்? அந்தப் படத்தைத் தொடங்கி ரிலீஸ் செய்திருந்தால் இந்நேரம் உத்தம வில்லன் நஷ்டம் தீர்ந்திருக்கும். எனவே அந்தப் படத்தை உடனே தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் பாபநாசம் படத்துக்கு எந்த ஒத்துழைப்பையும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் தர மாட்டார்கள், என்று நேற்றைய கூட்டத்தில் அதிரடியாக முடிவெடுத்துள்ளனர்.
ஜூலை 3-ம் தேதி படம் ரிலீஸ், இன்று முதல் ரிசர்வேஷன் ஆரம்பம் என அறிவித்துள்ள பாபநாசம் தயாரிப்பாளரும், கமல் ஹாஸனும் விநியோகஸ்தர்களின் இந்த முடிவுக்கு இன்னும் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்கள்!












Click it and Unblock the Notifications