டிடிவி தினகரனுக்கு எதிராக திவாகரன் போர்க்கொடி! ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை!!
டிடிவி தினகரன் மேல் அதிருப்தியில் உள்ள திவாகரன், வேட்பாளரை மாற்றியே தீருவேன் என ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் அதிருப்தியடைந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தம்பி, திவாகரன், மன்னார்குடியில் உணவு அமைச்சர் காமராஜ் மற்றும் ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா தலைமையில் ஒரு அணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணி என 3 அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் இந்த 3 அணியினரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். மேலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.

சசிகலா வழிகாட்டல்
சசிகலாவால் அதிமுக துணை பொதுசெயலாளராக அறிவிக்கப்பட்ட அவரின் அக்கா மகன், டிடிவி தினகரன், அதிமுகவை வழிநடத்தி செல்கிறார். சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை சென்றதால் அவரால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

முதல்வர் பதவிக்கு ஆசை
இருப்பினும், கட்சியையும் ஆட்சியையும் தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக உள்ளார். தங்களின் குடும்பத்தில் நம்பிக்கைக்குரியவரான டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக டிடிவி தினகரனை தேர்வு செய்து ஆட்சி பொறுப்பை கைப்பற்றலாம் என திட்டம் தீட்டி அதனை செயல்படுத்துகிறார் சசிகலா என கூறப்படுகிறது.

முதல்வர் அதிருப்தி
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனேயே திவாகரன் சென்னையில் இருந்து அவசர அவசரமாக மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

சசிகலாவை சந்திக்க திட்டம்
அங்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் மற்றும் தனது தீவிர ஆதரவாளரான சிவாராஜமாணிக்கம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளார். அவர்களின் ஆதரவை கேட்டுள்ளார். இதுகுறித்து பெங்களூர் சிறையில் உள்ள தனது அக்கா சசிகலாவை சந்தித்து வேட்பாளரை மாற்ற கோரப்போவதாக கூறி நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக திவாகரன் புறப்பட்டுள்ளார்.

நடராஜனுக்கும் விருப்பம் இல்லை
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதில் சசிகலா கணவர் நடராஜனுக்கும் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. டிடிவி தினகரன் மேல் அதிருப்தியில் உள்ள திவாகரன், வேட்பாளரை மாற்றியே தீருவேன் என ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications