ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதே மக்களின் விருப்பம்... விஜயகாந்த் தடாலடி
மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு நீடிக்கக் கூடாது என்பதே மக்களின் விருப்பம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் : மக்கள் நலனில் அக்கறை செலுத்தாத அரசு நீடிக்கக் கூடாது என்பதையே மக்கள் விரும்புவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகார் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதோடு, நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்ற கேட்டுக் கொண்டுள்ளார்.

சுனாமி, புயல் போன்ற எந்த பேரிடரானாலும் தேமுதிகவின் முன் நின்று உதவுவது போல தமிழகத்தை ஆட்கொண்டிருக்கும் டெங்குவை ஒழிக்க குப்பைகளை அகற்றுவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நம்மால் இயன்றதை செய்வோம் என்றும் கேப்டன் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சென்றார். அங்கு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரெட், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் விஜயகாந்த் கேட்டறிந்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிலவேம்பு கசாயத்தையும் விஜயகாந்த் விநியோகித்தார். இதே போன்று பஜார் வீதியில் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் அவர் வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கூறியதாவது : தமிழகம் முழுவதும் குப்பைகளை அகற்றியிருந்தால் டெங்குவை கட்டுப்படுத்தி இருக்கலாம், அதனை செய்ய அரசு தவறி விட்டது. குப்பைகளை ஒழிக்க மக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டால் டெங்குவை ஒழிக்கலாம்.
டெங்கு விவகாரத்தில் அரசியல் செய்யாமல், டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு நீடிக்கக் கூடாது என்றே மக்கள் விரும்புகின்றனர் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications