82 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்... பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது தேமுதிக
சென்னை: தமிழக அரசியல் களத்தில் காணாமல் போய்விட்டதாக கருதப்பட்ட தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தமது இருப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது.
தேமுதிக தொடங்கப்பட்டு விஸ்வரூப வெற்றியைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாகவும் சட்டசபையில் கோலோச்சியது. பின்னர் தேமுதகவில் ஏற்பட்ட குழப்பங்கள் அக்கட்சிக்கும் பெரும்பின்னடைவை ஏற்படுத்தியது.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் தமிழக தேர்தல் களத்தில் தேமுதிக காணாமல் போய்விட்டதாகவே கருதப்பட்டது.
ஆனால் தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்திருக்கிறது தேமுதிக. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 82 இடங்களில் தேமுதிக வென்றுள்ளது.

திமுக, அதிமுகவை தொடர்ந்து காங்கிரஸ் 88 இடங்களைப் பெற்ற நிலையில் தேமுதிக 4-வது இடத்தை பெற்றிருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 2 இடங்களில் தேமுதிக வென்றுள்ளது. இரு இடதுசாரிகளும் இணைந்தே 77 இடங்களைத்தான் பெற்றுள்ளனர்.
ஊரகப் பகுதிகளில் தேமுதிகவுக்கு இன்னமும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் 330 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை தேமுதிக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications