தமிழக தலைமைச் செயலாளராக சகாயத்தை நியமிக்க மக்கள் விருப்பம்: விஜயகாந்த்
சென்னை : புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''தமிழ்நாட்டு தலைமைச் செயலகத்திற்கு புதிய தலைமைச் செயலாளராக திருமதி.கிரிஜா வைத்தியநாதன் அவர்களை நியமித்து, நிர்வாக சீர்திருத்தம் பொறுப்பு, ஊழல் கண்காணிப்பு பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 30 ஆண்டு காலமாக மாவட்ட ஆட்சியராக பல துறையில் பணியாற்றியவர். புதியதாக தலைமை செயலாளராக பதவியேற்ற பிறகு, அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் துணை போகாமல் நேர்மையாக நிர்வாகத்தை வழிநடத்த வேண்டும்.
புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கு தமிழ்நாட்டு மக்களும், சமூக ஆர்வலர்களும் திரு.சகாயம் அவர்களை நியமிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தமிழக அரசு, தைரியமிக்க நேர்மையான திரு.சகாயம் அவர்களை நியமித்தால், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் தவறு செய்வதை தட்டிக்கேட்பார் என்கிற காரணத்தினால் தான் இவரை நியமிக்கவில்லை என்று மக்களும் பேசிக்கொள்கிறார்கள்.
சேகர்ரெட்டி, ராம்மோகன்ராவ், வீட்டிலும், அலுவலகத்திலும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியிலும் வருமான வரி சோதனை செய்ததுபோல், தமிழகத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications