பாஜக கூட்டணி: சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, நாகர்கோவில், ஈரோடு தொகுதிகளுக்கு மல்லுகட்டு
சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட.... இழுபறிக்கு காரணமே 'தொகுதிகள்" யாருக்கு என்பதில் ஏற்பட்ட சிக்கல்தான் என்று கூறப்படுகிறது.
பாஜக அணியில் தேமுதிக 20 தொகுதிகளைக் கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பாஜக தரப்பில் 14 தொகுதிகளை தர முடியும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் 14 தொகுதிகளை தேமுதிக ஏற்றுக் கொள்ளக் கூடும் எனக் கூறப்படுகிறது. ஆனால் தேமுதிக போட்டியிட விரும்பும் 14 தொகுதிகளில் நாகர்கோவிலும் ஒன்று.
நாகர்கோவில்
நாகர்கோவில் லோக்சபா தொகுதியில் பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிட விரும்புகிறார். அதனால் பாஜக அந்த தொகுதியை எடுத்துக் கொள்ள விரும்புகிறது.
எங்களுக்கே நாகர்கோவில்- தேமுதிக
ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் 68 ஆயிரம் வாக்குகளைப் பெற்றதால் இந்த முறை எங்களுக்குத்தான் அந்த தொகுதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் தேமுதிக.
பாமகவும் கிடுக்குப் பிடி
பாமக கேட்கும் 10 தொகுதிகளில் சேலம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி அடங்கும்.
10-ல் 3 ஐ கேட்கும் பாஜக
பாமகவின் 10 தொகுதிகளில் சேலம், கடலூர், கிருஷ்ணகிரியை பெறுவதற்கு பாஜக முயற்சிக்கிறதாம். இதில் பாமக கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். நாங்கள் சொல்றதெல்லாம் எங்க பெல்ட். நாங்கதான் ஜெயிப்போம்.. அதனால எங்ககிட்டேயே கொடுக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் பிடிவாதம்.
ஈரோடு
மதிமுகவைப் பொறுத்தவரையில் ஈரோட்டில் கணேசமூர்த்திதான் வேட்பாளர். ஆனால் புதிய நீதிக்கட்சியோ ஈரோடு தொகுதியைக் கேட்டு மதிமுகவை சீண்டிக் கொண்டிருக்கிறதாம். இந்த இழுபறிகளை பாஜக எப்படித்தான் தீர்க்கப் போகிறதோ?