நாங்க 'டேக்' ஆப்' ஆகிவிட்டோம் - தேமுதிக வந்தாலும் தலைமை ஏற்க முடியாது- விஜயகாந்துக்கு வைகோ 'குட்பை'
சென்னை: மக்கள் நலக் கூட்டணி மக்கள் மனதில் நன்றாகப் பதிந்து விட்டது; தேமுதிக வந்தாலும் கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ உறுதிபட தெரிவித்துவிட்டார். இதனால் தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணியோ அல்லது மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிகவோ கூட்டணி அமைக்காது என்றே தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டி என்று பிரகடனம் செய்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மேலும் விஜயகாந்த் தலைமையை ஏற்கும் கட்சிகள் வந்து பேசுங்கள் எனவும் தேமுதிக அழைப்பு விடுத்தது.
இதுநாள் வரை தேமுதிகவுக்காக காத்திருந்த பாஜக, மக்கள் நலக் கூட்டணி கட்சிகளோ இப்போது விஜயகாந்த்தை விட்டு விலகி வருகின்றன. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவோ, தேமுதிக தங்களுடைய கூட்டணிக்கு வந்தாலும் தலைமை ஏற்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவிட்டார். திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
அதிமுக அரசின் மர்மங்கள்
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசின் மர்மமான சம்பவங்கள் சூழந்த செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வேலை வாங்கி தருவதாக அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்படி என்றால் அமைச்சர்கள் உதவியாளர்கள் மூலம் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வீட்டு சிறையில் அமைச்சர்கள்?
அதேபோன்று ஐவர் அணியில் இருந்த அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாக வரும் செய்திகள் உண்மையா வதந்தியா என தெரியாது. அவர்களிடம் இருந்து ரூ.1,000 கோடி கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. இது உண்மையா என தெரியாது.
நாடகமா?
கடந்த நான்கே முக்கால் ஆண்டு இவர்கள் பற்றி தெரியாமல் போனது ஏன்? இது மக்களை ஏமாற்ற போடும் நாடகம். இதற்கு முன்பு சிலர் மீது இதேபோன்று புகார்கள் கூறப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களோடு யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என கூறினார்கள். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்குவதில் இருந்து தப்ப நாடகம் போடுவதாக கூறினார்கள். இப்போதும் இது நாடகம் போல் உள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் அதிக ஊழல் நடந்துள்ள மாநிலம் என தமிழ்நாட்டை ஒரு பொருளாதார குழு கூறியுள்ளது. எனவே இதனை திசை திருப்ப நடக்கும் நாடகமாக மக்கள் சந்தேகிக்கிறார்கள். இதில் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுகவுக்கு மாற்றாக உள்ள திமுகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சி. 2ஜி அலைவரிசை வழக்கில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்கள். எனவே அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தருகிறார்கள்.
செல்போன் சிங்கங்கள்
மக்கள் நலக்கூட்டணியில் நான், திருமாவளன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இதுவரை 4 கட்ட சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து உள்ளோம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்கள் அணிக்கு மக்கள் திரண்டு வந்து ஆதரவு தருகிறார்கள். ஆனால் இதில் பிரச்னை ஏற்படுத்துவது போல் சிலர் செய்திகளை பரப்புகிறார்கள். மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு கொள்கைகள் உடைய மக்கள் நலகூட்டணிக்கு இஞைர்கள், மாணவர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இந்த இளைஞர்களை நான் செல்போன் சிங்கங்கள் என்று பாராட்டுகிறேன்.
ம.ந. ஆட்சி அமைக்கும்
மக்கள் நலக்கூட்டணியில் மதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என ஒருங்கிணைப்பாளரான நான் கூறமுடியாது. தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, துண்டு பிரசுரம் அச்சடிப்பு, தேர்தல் பணிக்குழு அமைப்பு என பல்வேறு பணிகளில் மக்கள் நலக்கூட்டணி ஈடுபட்டு வருகிறது. எங்கள் கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இப்போது கூறமாட்டேன். ஆனால் தமிழகத்தில் மக்கள் நல கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். முதல் அமைச்சர் யார் என இப்போது கூற தேவையில்லை. இதனால் பின்னடைவு ஏற்படாது. 1967 ல் திமுக போட்டியிட்டபோது முதல் அமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்கவில்லை.
டேக் ஆப் ஆகிவிட்டோம்...
மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் வந்தால், தேமுதிக தலைமையில் கூட்டணி அமையுமா என்றால் வாய்ப்பில்லை. மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நன்றாக பதிவு செய்யப்பட்டு விட்டது. எங்கள் கூட்டணி விமானம் நன்றாக டேக்ஆப் ஆகிவிட்டது. மக்கள் நல கூட்டணியின் செயல் திட்டங்கள் மக்கள் மனதை நன்றாக சென்றடைந்து விட்டது.
சென்னை ஆர்ப்பாட்டம்
உடுமலையில் பொறியியல் மாணவர் சங்கர் படுகொலையை கண்டித்து வருகிற 21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் நான், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி பணம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். புகார் கொடுக்கும் 10 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோவின் திட்டவட்டமான இந்த அறிவிப்பால் இந்த தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி இடையே கூட்டணி சாத்தியமற்ற ஒன்றாகவே மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.