நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி ஹைகோர்ட்டில் திமுக முறையீடு - நாளை விசாரணை
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது. சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டது குறித்தும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்
சென்னை: சட்டசபையில் சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டது குறித்தும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை வாய் மொழியாக இந்த முறையீடு வைக்கப்பட்டது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், திமுகவின் முறையீடு மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.

வழக்கு தாக்கல் செய்ய தலைமை நீதிபதி ரமேஷ் வழக்கறிஞருக்கு அனுமதி அளித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் வழக்கு நாளை காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. திமுக, ஒபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரினர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி 122 ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
ரகசிய வாக்கெடுப்பு கோரி எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினின் சட்டை கிழிந்தது. பல உறுப்பினர்கள் காயமடைந்தனர். எதிர்கட்சியினர் யாரும் இல்லாமலேயே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications