65 திமுக மாவட்ட செயலாளர்கள் - தேர்தலைத் தவிர்த்து "தேர்வு" மூலம் அறிவிப்பு?
சென்னை: திமுகவில் 65 மாவட்டங்களுக்கான செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவதைத் தவிர்த்து "தேர்வு" மூலம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் உட்கட்சித் தேர்தல் கலவர களேபரத்துடன் நடைபெற்று வருகிறது. திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் மலைபோல் புகார்கள் குவிந்து வருகின்றன.
கட்சியின் ஒன்றிய நகர செயலாளர்கள் தேர்தலில் தமது ஆதரவாளர்களை ஜெயிக்க வைக்க 'குறுநில' மன்னர்களாக கோலோச்சிய மாவட்ட செயலாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் திமுக தலைமையோ மாவட்ட செயலாளர் தேர்தலை சுமூகமாக நடத்த முடிவு விரும்புவதாக கூறப்படுகிறது.
இன்று முதல் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் தொடங்கிவிட்டது. மாவட்டங்களில் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்துவதை திமுக தலைமை இம்முறை தவிர்க்க விரும்புகிறதாம்.
அதாவது 65 மாவட்டங்களிலும் பிரதான போட்டியாளர்களை சென்னைக்கு அழைத்து தலைமை சொல்கிறவர்களை மட்டும் மாவட்ட செயலாளர்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ளனராம். அப்போது அதிருப்தி அடையும் நபர்களையும் நேரடியாக சமானதப்படுத்தி வேறு ஒரு வாய்ப்புக்கான உத்தரவாதம் அளிக்கவும் முடிவு செய்துள்ளனராம்.
இப்படி செய்வதன் மூலம் 'கோஷ்டி" கானத்தை ஓரளவு கட்டுப்படுத்திவிடலாம் என்பதுடன் உட்கட்சி தேர்தலில் வெட்டு குத்து என்று ரணகளமாகி அசிங்கப்படுவதைவிட இந்த பஞ்சாயத்து சிஸ்டமே மேல் என்று நினைக்கிறதாம் திமுக தலைமை!
வாழ்க உட்கட்சி ஜனநாயகம்!