கருப்புக்கொடி பிளாஷ்பேக்: நேரு, இந்திரா, மோடி - எதிர்கட்சியினரின் போராட்ட வரலாறு
முன்னாள் பிரதமர்கள் பண்டித ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, பிரதமர் மோடி ஆகியோருக்கு பல்வேறு கட்டங்களாக கருப்புக்கொடியை காட்டி போராட்டம் நடத்தியுள்ளனர்.
Recommended Video

சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் ஏற்கனவே முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்திக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் தமிழகம் வந்துள்ள பிரதமருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும், ஊடகங்களின் கவனத்தையும் கவரலாம் என்பது எதிர்கட்சியினரின் எதிர்பார்ப்பு.
கடந்த காலங்களில் திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளது. இந்த முறை ஒட்டுமொத்த எதிர்கட்சியினரும் பிரதமர் மோடிக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர்.

கருப்புக்கொடி போராட்டம்
1957 ஆம் ஆண்டு இறுதியில், பிரதமர் ஜவஹர்லால் நேரு தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் நான்சென்ஸ் என்றும், கிழவர்கள் நாடுகடத்தப்பட வேண்டியவர்கள் என்றும் பேசியது தமிழக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் மீதும், தமிழர் தலைவர்களின் மீதும் நேரு மரியாதையற்ற முறையில் பேசினார். இதற்கும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு கொடி போராட்டம் அறிவித்தது திமுக.

கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது
1958ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி சென்னை வந்த அப்போதய பிரதமர் நேருவுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. காவல்துறையினர் தடையை மீறி கருப்புக் கொடிகளை மறைத்து எடுத்துச் சென்று, நேருவுக்கு வரவேற்பு கொடுப்பவர்களைப் போல குவிந்த திமுகவினர் யாரும் எதிர்பாராத வகையில் கருப்புக்கொடியை வீசியும், கொடியசைத்தும் நேருவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

திமுகவின் கருப்புக்கொடி
1977-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த 2 மாதங்களில், காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி தமிழகத்தில் சுறுப்பயணம் மேற்கொண்டார். எமர்ஜென்சி காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட திமுகவினர், இந்திரா காந்திக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 29.10.1977 அன்று மதுரையில் கருப்புக்கொடி காட்டினர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமின்றி தப்பினார் இந்திரா. இந்த தாக்குதலில் பழ நெடுமாறன் காயமடைந்தார்.

எதிர்கட்சியினர் எதிர்ப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தமிழக மக்களுக்கு எதிரான மனநிலையில் செயல்படும் பிரதமர் மோடியை கண்டித்தும் திமுக, மதிமுக, காங்கிரஸ், திரைத்துறையினர், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி என பல கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவின் துக்க தினம்
மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றுங்கள், கருப்பு உடை அணியுங்கள் துக்க தினமாக அனுசரியுங்கள் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்ததை ஏற்று காலை முதலே கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். திமுகவின் கருப்புக்கொடி போராட்ட வரலாறு கடந்த 60 ஆண்டுகாலமாக நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications