"தளபதி"க்கு பரிசாக வந்த ஒரு வயசு ராஜகுதிரை... சுழி 10 இருக்காம்!
திரவிட முன்னேற்றக்கழக தொண்டர்களினால் தளபதி என்று பாசத்தோடு அழைக்கப்படும் மு.க.ஸ்டாலினுக்கு அவரது ஆதரவாளர் ஒருவர் குதிரை ஒன்றை பரிசளித்துள்ளார். கம்பீரமான அந்தகுதிரையைப் பற்றித்தான் இப்போதைக்கு பரபரப்பான பேச்சாக உள்ளது.
மன்னர் காலத்தில் படை நடத்தும் தளபதிகளுக்கு குதிரைகள்தான் வெற்றியை தேடித்தருவதில் முக்கிய பங்காற்றி உள்ளது.
வரலாற்றில் குதிரைக்கு என்று தனி இடம் உள்ளது. உலகப்புகழ் பெற்ற அலெக்சாண்டர் முதல் நெப்போலியன் உள்ளிட்ட பலரும் குதிரைகளில்தான் பயணம் செய்து இருக்கின்றனர்.
தி.மு.க.வின் தளபதி என்று அந்த கட்சி தொண்டர்களால் போற்றப்படும் மு.க.ஸ்டாலினுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஷாகிர்ஜா என்ற தொண்டர் குதிரை குட்டி ஒன்றை பரிசளித்தார். நான்கரை அடி உயரம் கொண்ட இந்த குதிரை குட்டிக்கு ஒரு வயதாகிறது.
செம்பொன் நிறம் கொண்ட இந்த குதிரை ராஜ குதிரை ஆகும். ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் மன்னர்கள் வாரிசுகளிடம் வாங்கி உள்ளனர்.
தவமணி, கமலக்கண்ணன் உள்பட 10 விதமான சுழிகள் உள்ளன. இவ்வளவு சுழிகள் கொண்ட குதிரை அரிதானது மட்டுமல்ல வெற்றியையும் தேடித்தருமாம்.
இந்த மாதிரி குதிரை ஒன்றை வாங்கி பரிசளிக்க வேண்டும் என்று அந்த தொண்டர் கடந்த 7 ஆண்டுகளாக காத்திருந்துள்ளார். இந்த ஆண்டுதான் கிடைத்துள்ளது. இது 9 அடி உயரம் வரை வளருமாம்.
இந்த குதிரை இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் குதிரை குட்டி பரிசளித்ததாக அந்த தொண்டர் பெருமிதத்துடன் கூறினார்.
குதிரையுடன் ஸ்டாலின் சும்மா கம்பீரமாக போஸ் கொடுக்கவே உற்சாக விசிலடித்தனர் தொண்டர்கள்.