ஆர்கே நகர் மக்களே..மருதுகணேஷை ஜெயிக்க வச்சா கருணாநிதியே வந்து நன்றி சொல்வார்.. திமுகவின் புது யுக்தி
ஆர்.கே.நகர் மக்கள் திமுக வேட்பாளர் மருதுகணேஷை வெற்றி பெற வைத்தால் கருணாநிதியே வந்து நன்றி சொல்வார் என்று திமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
சென்னை: ஆர்.கே.நகர் மக்கள் திமுக வேட்பாளர் மருதுகணேஷை வெற்றி பெற செய்தால் கருணாநிதியே வந்து நன்றி தெரிவிப்பார் என்று திமுகவினர் புதிய பிரசார யுத்தியை கையில் எடுத்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டாக உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை தற்போது மெல்லத் தேறி வருவதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் முரசொலி அலுவலகத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் கருணாநிதி அழைத்து வரப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கருணாநிதி அண்ணா அறிவாலயத்துக்கும் வருகை தருவார் என்று நமது ஒன் இந்தியா தமிழ் தளம் செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதி அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். இது நமது செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.
இதேபோல் ஆர்கே நகர் தொகுதிக்கும் கருணாநிதி வருகை தர வாய்ப்புள்ளது என்றும் நமது தளம் பதிவிட்டிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக, நாம் தமிழர் கட்சி என போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை வெற்றி பெற செய்தால் திமுக தலைவர் கருணாநிதியே வந்து நன்றி சொல்வார் என்று திமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். திமுகவினர் சொல்வதை பார்த்தால் இன்னும் ஓரிரு நாட்களில் திமுக பிரசார மேடையில் கருணாநிதி தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.