ஆர்.கே. நகரில் 6 ஆண்டுகளாக அடிப்படை வசதி செய்யப்படவில்லை- திமுகவின் மருதுகணேஷ் புகார்
ஆர்.கே. நகரில் 6 ஆண்டுகளாக அடிப்படை வசதி செய்யப்படவில்லை என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.முக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் பிரவீன் நாயரிடம், மருதுகணேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே. நகரில் 6 ஆண்டுகளாக அடிப்படை வசதி செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பாக டிடிவி.தினகரன், திமுக சார்பாக மருதுகணேஷ், ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன், தீபா பேரவை சார்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன், நாம் தமிழர் சார்பாக கலைக்கோட்டுதயம், பாஜக சார்பாக கங்கை அமரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

பலமுனைப் போட்டி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுவதால் வெற்றி யாருக்கு என்பது கணிக்க முடியாமல் உள்ளது. ஆளும் அதிமுக ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 3 அணியாக பிரிந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி
மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக ஏற்கனவே வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர் கலைக்கோட்டுதயம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வந்திருந்தார்.

திமுக வேட்பாளர்
திமுக சார்பாக களமிறங்கும் மருதுகணேஷ் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் பிரவீன் நாயரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து மருதுகணேஷ் வாழ்த்துபெற்றார்.

அடிப்படை வசதியில்லை
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருதுகணேஷ், ஆர்.கே. நகரில் கடந்த 6 ஆண்டுகளாக எந்த வித வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார். ஆர். கே. நகரில் திமுக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புவதாக கூறிய மருதுகணேஷ், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் கவனம் செலுத்துவேன் என்று கூறினார்.

மதுசூதனன் - டிடிவி தினகரன்
ஓ.பி.எஸ். அணி சார்பாக ஆர்.கே.நகரில் போட்டியிடும் மதுசூதனன், அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசையமைப்பாளர் கங்கை அமரனும் நாளை மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications